Skip to main content

மகேந்திரன் கூறியதைக் கேட்டு மனமுடைந்த எம்.ஜி.ஆர்... எழுத்தாளர் சுரா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

mgr

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுல அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து வருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

" 'உதிரிப்பூக்கள்', 'முள்ளும் மலரும்' ஆகிய படங்களை எடுத்த இயக்குநர் மகேந்திரன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கல்லூரியின் ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர் வருகைதந்துள்ளார். அது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக எம்.ஜி.ஆர் இருந்த காலகட்டம். எம்.ஜி.ஆர் பேசுவதற்கு முன் மாணவர்கள் சிலர் மேடையில் பேசுகின்றனர். அவர்களுள் ஒருவராக மகேந்திரனும் பேசுகிறார். மகேந்திரன் பேசும்போது மரங்களைச் சுற்றி காதல் டூயட் பாடுவது, புல்வெளிகளில் ஓடி காதல் டூயட் பாடுவது ஆகியவற்றை விமர்சித்து, தமிழ் சினிமா செயற்கையாக உள்ளது எனக் கூறியுள்ளார். மகேந்திரன் பேசிவிட்டு மேடையிறங்கிவிடுகிறார். சற்று நேரம் கழித்து கல்லூரி முதல்வரிடம் சொல்லி மகேந்திரனை கூப்பிடச் சொல்கிறார் எம்.ஜி.ஆர். மகேந்திரன் வந்து எம்.ஜி.ஆரைச் சந்திக்கிறார்.

 

உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. நீங்கள் எதிர்காலத்தில் அருமையான பேச்சாளராகவும் அருமையான மனிதராகவும் முன்னுக்கு வருவீர்கள் என்று தன் கைப்பட எழுதிக் கையெழுத்திட்டு மகேந்திரனிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். யோசித்துப் பாருங்கள்... எம்.ஜி.ஆர் படத்திலும் இது போன்ற காட்சிகள் இருக்கும். இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் அன்று சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தவர். ஒரு கல்லூரி மாணவன், படங்களில் வருவதை விமர்சித்து செயற்கையாக உள்ளது என்று சொல்வதா என்று நினைத்துக் கோபப்பட்டிருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர் அதைக் கையாண்டது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. 

 

writer sura

 

பின், மகேந்திரன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் ஒரு பத்திரிகையில் நிருபராக வேலைக்குச் சேர்கிறார். தற்போது உள்ளதுபோல இவ்வளவு பத்திரிகையெல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது; விரல்விட்டு எண்ணிவிடலாம். எம்.ஜி.ஆர் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது அப்படம் குறித்து அறிவதற்காக பத்திரிகையாளர்கள் அவரைச் சந்திக்கச் செல்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், மகேந்திரனைப் பார்த்ததும் அடையாளம் கண்டுவிட்டார். நீங்கள் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்தானே... இங்கு என்ன செய்துகொண்டிருக்கீங்க எனக் கேட்டுள்ளார். பத்திரிகையில் நிருபராக வேலை செய்யும் விஷயத்தைக் கூறியவுடன் எந்தப் பத்திரிகை என்று எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். மகேந்திரன் தான் வேலை பார்க்கும் பெரிய அளவில் பிரபலமில்லாத அந்தப் பத்திரிகையின் பெயரைச் சொல்லியுள்ளார். உடனே எம்.ஜி.ஆர், உங்கள் திறமைக்கு ஏற்ற பத்திரிகை அது இல்லையே... வேறு ஏதாவது பத்திரிகையில் முயற்சி பண்ணி பார்ப்போம் எனக் கூறியுள்ளார்.

 

பின்னர், மகேந்திரன் வேறு ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்கிறார். நாட்கள் செல்கின்றன... வேறொரு படப்பிடிப்பு தளத்தில் எம்.ஜி.ஆரும் மகேந்திரனும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. அப்போது 'பொன்னியின் செல்வன்' கதைக்கு நான் நடிக்கும்படி திரைக்கதை, வசனம் எழுத முடியுமா என மகேந்திரனிடம் கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். மகேந்திரனும் சம்மதம் தெரிவித்தார். இப்போது லாயிட்ஸ் ரோட்டில் தலைமைக் கழகம் உள்ளதே, அது எம்.ஜி.ஆரின் சொந்த வீடு. அங்குதான் அவருடைய பட நிறுவனமும் இருந்தது. அங்கு மாடியில் திரைக்கதை எழுத மகேந்திரனுக்கு ஓர் அறை ஒதுக்கி கொடுக்கப்படுகிறது. அவரும் அங்கு இருந்தே திரைக்கதை, வசனம் எழுத ஆரம்பிக்கிறார். நாட்கள் செல்லச்செல்ல மகேந்திரனிடம் சாப்பிடக் காசு இல்லை. அங்கே எதிரே உள்ள ஒரு மெஸ்ஸில் அவருடைய நண்பருக்கு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கை வைத்து இவரும் சாப்பிட ஆரம்பிக்கிறார். 

 

திரைக்கதை எழுதி முடித்தபின், பேப்பரில் எழுதிவைத்துள்ள மொத்த திரைக்கதையையும் எடுத்துக்கொண்டு ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருந்த எம்.ஜி.ஆரைச் சந்திக்க மகேந்திரன் சைக்கிளில் செல்கிறார். எம்.ஜி.ஆரிடம் போய் திரைக்கதை எழுதி முடித்துவிட்டதைச் சொல்லியிருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், வீட்டிலிருந்து மாதந்தோறும் பணம் அனுப்பிவிடுகிறார்களா என எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். முதலில் மகேந்திரனுக்கு என்ன பணம் குறித்து கேட்கிறார் என ஒன்றும் புரியவில்லை. பின், தங்கள் குடும்பம் நடுத்தரமான குடும்பம் என்றும் தன்னுடைய வீட்டில் இருந்து தனக்கு எந்தப் பணமும் அனுப்பமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

 

மகேந்திரன் காரைக்குடி பக்கம் என்றதும் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என எம்.ஜி.ஆர். நினைத்துள்ளார். மகேந்திரன் தன் நிலையை விளக்கிச் சொன்னதும், சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள் என எம்.ஜி.ஆர். கேட்டுள்ளார். தன்னுடைய நண்பரின் உதவியால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என மகேந்திரன் கூற, எம்.ஜி.ஆர் மனமுடைந்துவிட்டாராம். அடடா எனச் சொல்லி தலையில் எம்.ஜி.ஆர் கைவைத்ததாக மகேந்திரன் என்னிடம் சொன்னார். திரைக்கதை எழுத வேண்டும் என ஒரு வேலை கொடுத்துள்ளோம். முதலிலேயே அதற்கான பணம் குறித்து நாம் பேசியிருக்க வேண்டுமே... இப்படித் தவறு செய்துவிட்டோமே என நினைத்து எம்.ஜி.ஆர் மிகவும் வருத்தப்பட்டாராம். 

 

இப்ப எதுல வந்திங்க என எம்.ஜி.ஆர் கேட்க, சைக்கிளில் வந்த விஷயத்தை மகேந்திரன் கூறியுள்ளார். நீங்கள் நேராக எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் போங்க... வேற எங்கயும் போயிராதிங்க... அங்கேயே இருங்கள் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். உடனே மகேந்திரன் சைக்கிளில் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் அலுவலகம் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒர் உதவியாளர் கணிசமான தொகையை மகேந்திரனிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாகக் கூறியுள்ளார். இந்த விஷயங்களை மகேந்திரன் என்னிடம் கூறும்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை, எம்.ஜி.ஆர் என்ற அந்த நல்ல மனிதரின் இரக்கக் குணம், பண்பட்ட இதயம் குறித்து அறிந்து என் கண்களும் லேசாகக் கலங்கின."

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

Next Story

“எடப்பாடி இதை செய்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” - ஆ. ராசா ஆவேசம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 A. Rasa says If Edappadi does this, I will resign from my post

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி விமர்சித்ததாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று (09-02-24) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதற்கு ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. அதிமுக கட்சி வளர்ச்சி பொறுக்காமல் இப்படி பேசுகிறார்.

நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாகப் பேசுவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் ஆ. ராசா மக்களால் அடக்கப்படுவார். நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். அவரை மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்தால் இதுதான் தண்டனை என்பதை அவர் உணர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆ.ராசா கோவையில் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கிதை இல்லை. எடப்பாடி பழனிசாமி சேர்ந்த முன்னாள் அமைச்சர், முதலமைச்சர் பற்றியும், கலைஞர் பற்றி என்னவெல்லாம் பேசினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் இருக்கிறது. அதன் பிறகு, அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் அவர் வருத்தம் தெரிவித்து, தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.