Skip to main content

“உதவி இயக்குநராக முதல் க்ளாப் அடித்த இடத்தை மறக்காமல் இருக்க பாரதிராஜா செய்த செயல்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல் 

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பாரதிராஜா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“இயக்குநர் இமையம் பாரதிராஜா தமிழ்த்திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர். கடந்த 30 ஆண்டுகளாக கிராமங்களில் இருந்து திரையுலக நோக்கி வரும் பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்தான் முன்னுதாரணம். குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் சினிமா துறையில் ஜொலிக்க முடியும் என்று இருந்த காலகட்டத்தில் அதையெல்லாம் உடைத்தெறிந்து மிகப்பெரிய புரட்சியை செய்தவர் பாராதிராஜா. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், மண் வாசனை, ஒரு கைதியின் டைரி, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை என அவர் இயக்கிய பல படங்களை காலத்தைக் கடந்தும் இன்று நாம் நினைத்துப் பார்க்க முடியும். ஆனால், திரைத்துறையில் அவரது பயணம் அவ்வளவு எளிதானதாக இருந்துவிடவில்லை. 

 

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் பல்வேறு இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார். அதில் மிக முக்கியமானவர் பிரபல கன்னட இயக்குநரான புட்டன்னா கனகல். தமிழ்நாட்டில் கே.பாலச்சந்தர் போல கர்நாடகாவில் புட்டன்னா கனகல் மிகப்பெரிய இயக்குநர். பாரதிராஜா படங்களில் இருக்கும் கவித்துவத்திற்கு புட்டன்னா படங்களின் தாக்கம்தான் முக்கிய காரணம். 

 

இருளும் ஒளியும் என்று ஒரு தமிழ்ப்படத்தை புட்டன்னா கனகல் இயக்கிக்கொண்டிருந்தபோது அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார் பாரதிராஜா. ஜெமினி ஸ்டூடியோ வளாகத்தினுள்தான் படப்பிடிப்பு நடந்தது. பாரதிராஜாவிற்கு க்ளாப் அடிக்கும் வேலை. அதன் பிறகு ஊட்டி, கர்நாடகா எனப் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. புட்டன்னா கனகல் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் பெரும்பாலும் அவர் கர்நாடகாவில்தான் படப்பிடிப்பு நடத்துவார். அதேபோல பாரதிராஜாவும் பெரும்பாலும் மைசூரில்தான் படப்பிடிப்பு நடத்துவார். பாரதிராஜா ஏன் மைசூர் போய் படப்பிடிப்பு நடத்துகிறார் என்று நிறைய பேர் கேட்பார்கள். புட்டன்னா கனகலிடம் வேலை செய்தபோது அங்கிருக்கும் இடங்களோடு அவருக்கு நல்ல பரிட்சயம் ஏற்பட்டதுதான் அதற்கு காரணம். இருளும் ஒளியும் படம் முடிந்த பிறகு இன்னும் சில படங்கள் புட்டன்னாவிடம் பாரதிராஜா வேலை பார்த்தார். அதன் பிறகு, தனியாக படம் இயக்க ஆரம்பித்த பாரதிராஜா தன்னுடைய தனித்தன்மையால் மிக விரைவிலேயே மிகப்பெரிய இடத்தைப் பிடித்துவிட்டார். 

 

ஜெமினி ஸ்டூடியோ இன்றைக்கு ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸாக மாறிவிட்டது. அந்த வளாகத்தினுள்தான் பாரதிராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மனோஜ் க்ரியேஷனின் அலுவலகம் உள்ளது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் சிவாஜி முதன்முதலாக வசனம் பேசிய இடத்தில் அவருடைய சிலை இருக்கும். அதனருகே, இந்த இடத்தில்தான் பராசக்தி படத்திற்காக சிவாஜி சக்சஸ் என்ற வசனம் பேசினார் என்று ஓர் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும். இதை மனதில் வைத்துதான் முதன்முதலாக தான் க்ளாப் அடித்த இடத்திலேயே தன்னுடைய அலுவலகத்தை பாரதிராஜா அமைத்திருக்கிறாராம்”.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".