Skip to main content

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 2-வது படத்தின் பின்னணி இசையில் படக்குழு செய்த தில்லுமுல்லு!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'புதிய முகம்' திரைப்பட வெளியீட்டின்போது நடந்த சுவாரசிய சம்பவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

பல நேரங்களில் நாம் எதிர்பாராத சம்பவங்கள் திரையுலகில் நடைபெறும். சில சமயம் அது சுவாரசியமான சம்பவமாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பற்றி உங்களுக்குக் கூறுகிறேன். 'புதிய முகம்' படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்தப்படத்தை நடிகை ரேவதியும் அவரது கணவரும் இணைந்து தயாரித்திருந்தனர். ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன் அந்தப்படத்தை இயக்கினார். ரோஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இது ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டாவது படம். இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த 'நேற்று இல்லாத மாற்றம்...', 'கண்ணுக்கு மையழகு...' ஆகிய பாடல்கள் வெற்றிப்பாடல்களாக அமைந்தன. இந்தப்படத்திற்கு நான்தான் மக்கள் தொடர்பாளர். இலங்கை, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப்படத்திற்கு முன்னரே ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் படத்தின் இயக்குநர் சுரேஷ் மேனனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. ஆரம்பகாலங்களில் சுரேஷ் மேனன் இயக்கிய விளம்பரப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். சுரேஷ் மேனன் அவரை திலீப் என்றுதான் அழைப்பார்.

 

'புதிய முகம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து எல்லா ஏரியாக்களும் பிசினஸ் செய்யப்பட்டுவிட்டது. ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் அவர் சொந்த ஸ்டூடியோவில் வைத்து படத்தின் ரீரெக்கார்டிங் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இரு வாரங்களில் ரீரெக்கார்டிங் வேலைகளை முடித்துவிடுவேன் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார். ஆகையால், இரு வாரங்கள் கழித்து சுரேஷ் மேனன் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவிற்குச் செல்கிறார். மொத்தம் 15 ரீல்களில் 4 ரீல்கள் மட்டுமே ரீரெக்கார்டிங் செய்யப்பட்டு இருந்தன. ரீரெக்கார்டிங் முடித்து சென்சார் சான்றிதழும் வாங்கவேண்டும். ரிலீசுக்கு ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் சுரேஷ் மேனன் பதட்டமாகிவிடுகிறார். உடனே, இயக்குநருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒருபுறம் ரீரெக்கார்டிங் செய்யட்டும். நாம் இன்னொரு ஸ்டூடியோவில் சிடி கேசட் வைத்து ரீரெக்கார்டிங் செய்வோம் என முடிவெடுத்து ஒரு ஸ்டூடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாமல் ரீரெக்கார்டிங் செய்கின்றனர். ரீரெக்கார்டிங் முடித்து சென்சார் சான்றிதழும் வாங்கிவிடுகின்றனர். பின்பு, அங்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மான், எந்த இடத்தில் அவசியம் பிண்ணனி இசை தேவைப்படுகிறதோ அந்த இடத்திற்கு மட்டும் இசையமைத்தார். திட்டமிட்டபடி பட ரிலீஸ் தேதிக்கு முன்பு அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. 

 

தமிழ் சினிமா வியாபாரத்தில் திருநெல்வேலி - கன்னியாகுமரியைச் சேர்த்து டி.கே. என்பார்கள். அதுதான் இருப்பதிலேயே தூரமான இடம் என்பதால் அங்குதான் முன்கூட்டியே பிரிண்ட் அனுப்பிவைப்பார்கள். இரவு சென்னையில் இருந்து கிளம்பும் ஆம்னி பேருந்தில்தான் கொண்டுசென்று கொடுப்பார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையமைக்காத அந்த பிரிண்ட் திருநெல்வேலி, கன்னியாகுமரிக்குத்தான் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு, வெளிநாடு எனத் திரையிட்ட அத்தனை இடங்களிலும் படம் மாபெரும் வெற்றிபெற்றது. அனைத்து இடங்களிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசையோடு 'புதிய முகம்' திரைப்படம் திரையிடுகையில், திருநெல்வேலி - கன்னியாகுமரியில் மட்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை இல்லாமல் 'புதிய முகம்' திரைப்படம் வெளியானது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".