Skip to main content

ஐந்து படங்கள் தொடர் தோல்வி... விஜயகாந்த் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய எஸ்.ஏ.சி !

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் விஜயகாந்த் குறித்தும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

திரைத்துறையில் இன்று சாதித்துள்ள கதாநாயகர்களில் 90 சதவிகித கதாநாயகர்கள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே சாதித்துள்ளனர். அந்த 90 சதவிகித நாயகர்களில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்தும் ஒருவர். 'இனிக்கும் இளமை' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான விஜயகாந்த், அதன் பிறகு சில படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. பெரிய அளவிலான வெற்றியைப் பெறமுடியாமல் தவித்துவந்த விஜயகாந்துக்கு 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. நூறு நாட்கள் ஓடிய அந்தத் திரைப்படம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. 

 

அதன் பிறகு, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில் 'நெஞ்சிலே துணிவிருந்தால்' படத்தில் நடித்தார். அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் தோல்விப்படமாக அமையவில்லை. அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நடித்த 'நீதி பிழைத்தது', 'சாதிக்கொரு நீதி', 'சட்டம் சிரிக்கிறது', 'ஆட்டோ ராஜா', 'பட்டணத்து ராஜாக்கள்' என வரிசையாக 5 படங்கள் தோல்வியைத் தழுவின. ஐந்து தோல்வி படங்கள் கொடுத்தால் ஒரு நடிகனின் திரை வாழ்க்கை என்னவாகும்? எத்தனை காலத்திற்குத்தான் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் வெற்றியைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கமுடியும்? மார்க்கெட் சரிந்து படவாய்ப்புகள் இல்லாத நிலைக்கு விஜயகாந்த் சென்றுவிட்டார். விஜயகாந்த் எப்படிச் சரிவைச் சந்தித்தாரோ, அதுபோன்ற சரிவை எஸ்.ஏ.சந்திரசேகரும் சந்தித்தார். 'சட்டம் ஒரு இருட்டறை' படத்திற்குப் பிறகு அவர் இயக்கிய எந்த படங்களும் வெற்றிபெறவில்லை. 

 

பி.எஸ்.வீரப்பா தன்னுடைய கம்பெனி தயாரிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரை வைத்துப் படமெடுக்க முடிவெடுக்கிறார். அப்படத்தில் யாரை கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என எஸ்.ஏ.சந்திரசேகர் யோசித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த 'கோழி கூவுது' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றிருந்தது. உடனே, தன்னுடைய படத்தில் பிரபுவை நடிக்கவைக்கலாம் என முடிவெடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபுவை அணுகுகிறார். தொடர் தோல்விப்படங்கள் கொடுத்த இயக்குநராக எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்ததால், அவர் படத்தில் நடிக்க பிரபு மறுத்துவிடுகிறார். பின், 'அலைகள் ஓய்வதில்லை' போன்ற காதல் படங்களில் நடித்து இளம் கதாநாயகனாக வலம்வந்து கொண்டிருந்த கார்த்தியை அணுகுகிறார். கார்த்தியும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. பிரபு, கார்த்தி என இருவரது கால்ஷீட்டுமே கிடைக்காத காரணத்தால் மீண்டும் விஜயகாந்த்திடமே செல்கிறார். படவாய்ப்புகள் ஏதுமின்றி இருந்த விஜயகாந்த் உடனே சம்மதித்துவிடுகிறார். அப்படித் தொடங்கப்பட்ட படம்தான் 'சாட்சி'. 

 

'சாட்சி' திரைப்படம் வெளியானபோது நூறு நாட்கள் கடந்து வெற்றிகரமாக படம் ஓடியது. அந்த படத்தின் வெற்றி விஜயகாந்த்தை மீண்டும் பிஸியான கதாநாயகனாக மாற்றியது. பி.எஸ்.வீரப்பா - எஸ்.ஏ.சந்திரசேகர் - விஜயகாந்த் கூட்டணி 'வெற்றி' என்ற படத்திற்காக மீண்டும் இணைந்தது. அந்தப்படமும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேறு நிறுவனங்கள் வேறு இயக்குநர்கள் விஜயகாந்த்தை தங்கள் படங்களில் நடிக்கவைக்க போட்டிபோட்டனர். 'சாட்சி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த 20 ஆண்டுகள் தமிழகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விஜயகாந்த் திகழ்ந்தார். ஒரு சமயத்தில் கமல்ஹாசன் இந்திப்படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். அந்தக் காலகட்டத்தில் ரஜினிகாந்த்திற்கு அடுத்த நடிகராக விஜயகாந்த் இருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே  சொந்தம்” - சீமான் பேச்சுக்கு விஜயகாந்த் மகன் பதிலடி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Vijayakanth son of Seaman said that Murasu symbol belongs only to dmdk

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வருகை தந்தார். அப்போது வத்தலகுண்டு காளியம்மன் கோவில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னூத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்த விஜய பிரபாகரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய விஜய பிரபாகரன் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசும்போது, “திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே. பத்தாண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது. அண்ணன் சீமான் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்றது போல் தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு, தேமுதிக தொண்டர்களையும் பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது.

மேலும் ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, ஜாதியை பார்த்து வாக்களிப்பது என்பது இருந்துவிடக் கூடாது. தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார். இந்த விழாவில் நகரம், ஒன்றியம், மாவட்ட பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Next Story

சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் விஜயகாந்த் பெயரில் விருது!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Award in the name of Vijayakanth at the International Norway Tamil Film Festival!

15 வது சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் ‘வீரத்தின் மகன்’ திரைப்பட திரையிடல் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.குகுநாதன், நடிகர் போஸ் வெங்கட், இயக்குநர் கெளரவ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், பி.ஆர்.ஓ சங்க முன்னாள் செயலாளர் பெரு துளசி பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நார்வே தமிழ்த் திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் பேசுகையில், “ஆஸ்கார் உள்ளிட்ட வெளிநாட்டு விருதுகள் மற்றும் திரைப்பட விழாக்களின் பின்னால் நம் மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு என்று தனியான திரைப்பட விழாக்கள் இல்லை. சுமார் 222 நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், அவர்களது படைப்புகளுக்கும் தனி அங்கீகாரம்  கிடைக்க வேண்டும், அதற்காக தமிழர்களுக்கான திரைப்பட விழா ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நான் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நினைத்து வந்தேன். பிறகு 20210 ஆம் ஆண்டு அதற்கான முதல் அஸ்த்திவாரத்தை அமைத்து, சிறுக சிறுக என்று இன்று மிகப்பெரிய விழாவாக நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஆரம்பிக்கும் போது எனக்கு எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை. நார்வே நாட்டில் 15 ஆயிரம் மக்கள் தான் இருப்பார்கள், ஏதோ ஒரு திரைப்பட விழா என்று தான் நினைப்பார்கள். ஆனால், இன்று சுமார் இரண்டரை கோடிக்கு மேல் நான் விதைத்திருக்கிறேன். நம் படைப்புகளை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான முயற்சி தான் இந்த திரைப்பட விழா. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட 25 கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று விருது வழங்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், அவர்களை அங்கே அழைத்து செல்வது என்பது மிகப்பெரிய பொருட்செலவு. அதனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன், விருது அறிவிக்கப்பட்ட அனைத்து கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று கெளரவிக்க வேண்டும், அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆண்டு முதல்,  ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த எங்கள் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் விருது வழங்குவதை பெருமையாக அறிவிக்கிறோம். நாங்கள் தொடர்ந்து இந்த விழாவை நடத்திக் கொண்டிருப்போம். எனக்கு பிறகு என் இடத்தில் இருந்து நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்துவார்கள். நிச்சயம் ஒரு நாள் ஆஸ்கார் விருதுக்கு சமமான விருதாக சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விருது இருக்கும், என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.