Skip to main content

"35 ஆண்டுகளுக்கு முன்பு நாசர் குறித்து கண்ணதாசன் மகன் கூறியது அப்படியே நடந்தது..." - எழுத்தாளர் சுரா பகிரும் மலரும் நினைவுகள்!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

nasser

 

எழுத்தாளரும் மூத்தப் பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் நாசர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

'ஆகாயத்தாமரைகள்' என்ற படத்தின் படப்பிடிப்பு ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. அந்தப் படத்தில் கதாநாயகனாக சுரேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்தார். சத்யராஜ் ரேவதிக்கு அண்ணனாக நடித்திருந்தார். என்னுடைய நண்பர் வி. அழகப்பன்தான் அந்தப் படத்தை இயக்கினார். நான் அந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளர் என்பதால் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் செல்வேன். ஆர்.என்.கே. பிரசாத் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். அவருடன் இணைந்து கவியரசர் கண்ணதாசனின் மகனான கோபி கண்ணதாசன் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். கண்ணதாசன் மீது எனக்கு இருந்த மரியாதை காரணமாக அவர் மகன் மீது எனக்கு தனிப்பிரியம் உண்டானது. கோபி கண்ணதாசன், அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.

 

ஒருநாள் அவருடன் பேசிக்கொண்டிருக்கையில், எனக்கு நாசர் என்றொரு நண்பர் இருக்கிறார். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்துவிட்டு பாலசந்தரின் 'கல்யாண அகதிகள்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்றார். அருமையான ஆர்ட்டிஸ்ட், மிகச்சிறந்த திறமைசாலி எனக் கூறிவிட்டு, இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மிகச்சிறந்த ஒரு நடிகர் கிடைப்பார் என உறுதியாகக் கூறினார். 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. அவர் கூறும்போதே நாசர் என்ற பெயர் என் மனதிற்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. பின், 'ஆகாயத்தாமரைகள்' படப்பிடிப்பை முடித்துவிட்டு நாங்கள் சென்னை திரும்பிவிட்டோம்.

 

சில வாரங்கள் கழித்து, புலவர் சிதம்பரநாதனை தி.நகர் பேருந்து நிலையம் அருகே பார்த்தேன். அவர் செங்கல்பட்டில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு சினிமாவிற்கும் பாட்டெழுதிக்கொண்டிருந்தார். நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கும்கூட பாடல்கள் எழுதியுள்ளார். அந்த சந்திப்பில் புலவர் சிதம்பரநாதன், "இவன் பெயர் நாசர். என்னுடைய மாணவன்தான். அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்துவிட்டு பாலசந்தர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்" எனக் கூறி ஓர் இளைஞனை  அறிமுகம் செய்துவைத்தார். தி.நகரில் 11ஏ பேருந்தில்தான் நாசரை முதன்முதலாக சந்தித்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரத்தில் நாசர் பற்றி கோபி கண்ணதாசன் கூறிய விஷயத்தை அவரிடம் கூறினேன். அந்த சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

 

அடுத்த சில நாட்களிலேயே 'கல்யாண அகதிகள்' திரைப்படம் வெளியாகிவிட்டது. மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு திரையரங்கில்தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். நாசரின் நடிப்பைப் பார்த்து அசந்துபோய்விட்டேன். முதல் படத்திலேயே அவருடைய நடிப்புக்கு நான் ரசிகராகிவிட்டேன். குடித்துவிட்டு வந்து மனைவியைக் கொடுமைப்படுத்தும் வக்கிர புத்தியுள்ள கணவன் கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். வேறு எந்த வில்லன் நடிகரும் வெளிப்படுத்தாத ஒரு நடிப்பை நாசர் 'ஆகாயத்தாமரைகள்' படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். படத்தைப் பார்த்த பிறகு, நாசரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் மக்களை ரசிக்க வைக்கக்கூடியவராக நாசர் இருக்கிறார். நாசரின் வளர்ச்சியை அருகே இருந்து பார்த்தவன் நான். கடந்த 35 ஆண்டுகளில் நான்கு தலைமுறை உருவாகிவிட்டது. நான்கு தலைமுறைகளைக் கடந்தும் நடிகர் நாசர் ரசிகர்கள் மனதில் தொடர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருடைய திறமையும் அனைவரிடமும் எளிதாகப் பழகும் குணமும்தான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".