writer s ramakrishnan joined ilaiyaraaja biopic movie

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, ‘இளையராஜா’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் நடந்தது. அப்போது அறிவிப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டது. இப்படத்தை கனெக்ட் மீடியா, மெர்குரி மூவிஸ் மற்றும் பிகே பிரைம் என மூன்று நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம் உட்பட 5 மொழிகளில் வெளியாக திட்டமிட்டுள்ளார்கள். படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கவுள்ளதாகவும் 2025ன் நடுவில் படம் வெளியாகவுள்ளதாகவும் முன்பு தெரிவிக்கப்பட்டது. படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தில் பிரபல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இணைந்துள்ளார். இதனை தனது இணையதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன். அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார். திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

Advertisment

அதைத் தொடர்ந்து திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன். இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்துக்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் கண்டோம். அத்துடன் ஊர்மக்களைச் சந்தித்து உரையாடினோம். இளையராஜாவின் பழைய நேர்காணல்கள், பத்திரிக்கைச் செய்திகள் அவரது பழைய புகைப்படங்கள், காணொளிகள் எனச் சேகரித்துக் கொண்டேன். அவர் குறித்து வெளியான தகவல்கள் மற்றும் தொடர் கட்டுரைகளைத் தேடித்தேடி வாசித்தேன். அவர் கடந்து வந்த பாதை வலியும் வேதனையும் நிரம்பியது. தமிழ் திரையிசையில் அவரது சாதனைகள் நிகரற்றவை. இசையின் மானுட வடிவமே இளையராஜா.

அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். இப்படம் அவரது திரைவாழ்வில் மிக முக்கியப் படமாக அமையும். இரண்டு மாத கால தொடர் விவாதங்களுக்குப் பிறகு திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசன வடிவை எழுதி இயக்குநருக்குக் கொடுத்துள்ளேன். அவரது திருத்தம் மற்றும் மாற்றங்களுக்குப் பின்பு திரைக்கதையின் இறுதி வடிவம் உருவாகும். இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த எனக்கு அவரது படத்தில் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது பெருமகிழ்ச்சியைத் தருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment