சூர்யா வீட்டில் பண மோசடியில் ஈடுபட்ட பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவுக்கு 2021ஆம் ஆண்டு முதல் தனி பாதுகாவலராக அந்தோணி ஜார்ஜ் பிரபு என்ற காவலர் பணிபுரிந்து வருகிறார். அப்போது சூர்யா வீட்டில் பணிபுரியும் சுலோச்சனா மற்றும் அவரது தங்கை விஜயலெட்சுமி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காவலர் அந்தோணியிடம் குறைந்த விலையில் தங்க நாணயம் வாங்கி தருவதாக ரூ.42 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
மோசடி தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரிளித்த காவலர் அந்தோணி, “சுலோச்சனா தனது மகன்கள் பாலாஜி மற்றும் பாஸ்கர், தங்க நாணய திட்டம் நடத்தி வருவதாக தெரிவித்து அதில் பணம் கட்டும்படி கேட்டார். அதில் சேர்ந்தால் குறைந்த விலையில் தங்க நாணயம் கிடைக்கும் என கூறினார். அதனால் எனது தந்தையின் புற்று நோய் சிசிச்சைக்காக கடனாக வாங்கி வைத்த ரூ.1.92 லட்சத்தை அவர்களின் வங்கி கணக்குக்கு செலுத்தினேன். இதற்காக 30 கிராம் தங்க நாணயங்களை அவர்கள் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் ரூ.50.37 லட்சம் செலுத்தினேன். அதற்கு தங்க நாணயம் கொடுக்காமல் ரூ.7.91 லட்சம் பணம் மட்டும் கொடுத்தார்கள். மீதமுள்ள ரூ.42 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர்.” எனப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சுலோச்சனா மற்றும் அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், இவர்களோடு அவரது தங்கை விஜயலெட்சுமி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.