Skip to main content

பஸ் ட்ரைவரின் மகன்... இந்தியாவே கொண்டாடும் ராக்கி பாய்!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

kgf 2

 

ஒரு தனியார் விருது வழங்கும் மேடையில் கன்னட நடிகர் யஷ், “கன்னட சினிமாவும் ஒருநாள் இந்தியாவில் பெரிதாக பேசப்படும்” என்று உரக்க பேசினார். அவர் பேசியபோது அங்கிருந்த பல திரைத்துறை பிரபலங்களுக்கும், பல இந்திய மொழி பேசும் சினிமா ரசிகர்களுக்கும் யஷ் என்பவர் யாரென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி யஷ் பேசிய பிறகு அவரது நடிப்பில் உருவான ‘கே.ஜி.எஃப்’ படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. வெளியான அனைத்து மொழிகளிலும் யஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ படத்தைப் பார்த்தவர்கள் ரசித்தனர். ‘பாகுபலி’க்குப் பிறகு இந்தியா முழுவதும் வெற்றியைக் கண்ட ஒரு படமாக ‘கே.ஜி.எஃப் சாப்டர் 1’ மாறியது. கன்னட சினிமாவின் பிஸினஸ் என்பது ‘கே.ஜி.எஃப்’ படம் வெளியாகுவதற்கு முன்பாக 50 கோடியாக இருந்தது. ஆனால், ‘கே.ஜி.எஃப்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட 250 கோடி வரை வசூல் ஈட்டியது. தற்போது உருவாகி வரும் ‘கே.ஜி.எஃப் 2’-வின் பிஸினஸ் 500 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை நிரூபணம் செய்யும் வகையில், யஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு திடீரென வெளியான டீஸரை இந்தியா முழுவதிலுமுள்ள பல மொழி பேசும் ‘கே.ஜி.எஃப்’ ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  

 

கன்னட சினிமா ரசிகர்களுக்கு மட்டும் ‘ராக்கிங் ஸ்டார்’ என்று அறியப்பட்டு கொண்டாடப்பட்ட யஷ், தற்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பத்து வருடத்திற்கு மேலான உழைப்பு இருக்கிறது. ஹஸன் மாவட்டத்திலுள்ள நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் நவீன் குமார் கௌடா என்னும் யஷ். இவருடைய தந்தை கர்நாடகா அரசு பஸ் ட்ரைவர், தாய் குடும்பத் தலைவி. மைசூரில் பியூசி படிப்பை முடித்த பின்னர், நடிப்பின் மீது ஆர்வத்தின் காரணமாக பெங்களூருவிலுள்ள ட்ராமா ட்ரூப் ஒன்றில் இணைந்துகொண்டு நடிப்பைக் கற்றுக்கொண்டார். ஒரு நேர்காணலில் எப்படி நீங்கள் சாதாரணமாக இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “என்னுடைய அப்பா ஒரு பஸ் ட்ரைவர். நான் இவ்வளவு சம்பாதித்தும் இன்றும் அவர் பஸ் ட்ரைவராக பணிபுரிகிறார். இதுதான்...” என்று பதிலளித்தார். ‘கே.ஜி.எஃப்’ ரிலீஸ் சமயத்தில் ராஜமௌலி இந்த பட விழாவில் கலந்துகொண்டபோது, “நான் கேள்விபட்டேன் இன்றும் யஷ்ஷின் தந்தை பஸ் ட்ரைவராக பணிபுரிகிறார். என்னைப் பொறுத்தவரை யஷ் ஹீரோ அல்ல, அவரது தந்தைதான் ஹீரோ” என்றார்.

 

யஷ் ஒரே இரவில் நடிகராக நடிக்கத் தொடங்கி கன்னட சினிமாவின் உட்சநட்சத்திரமாக மாறவில்லை. தொடக்கத்தில் டிவி சீரியலில் நடித்தார். அதன் மூலம் கவனம் பெற்றவர். அதன்பின் சினிமாவில் துணை நடிகராக பல படங்களில் நடித்து, பின்னர் ஹீரோவாகி கன்னட சினிமாவில் தனக்கான சாம்ராஜ்யத்தைப் பிடித்தார். விவசாயிகளுக்கு, உதவி தேவை என்பவர்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை யஷோ மார்கோ அறக்கட்டளையின் மூலம் செய்து வருகிறார். கொப்பல் மாவட்டத்தில் வறட்சியினால் கஷ்டப்பட்டு வந்த விவசாயிகளின் கஷ்டத்தைப் போக்க, சுமார் நான்கு கோடி செலவில் ஏரியை தூர்வாரி கொடுத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் கர்நாடகா - தமிழ்நாடு என்றாலே காவிரி பிரச்சனை, மொழி பிரச்சனை போன்றவை நினைவுக்கு வரும். யஷ் தமிழ்நாட்டிற்கு ‘கே.ஜி.எஃப்’ பட புரோமோஷனுக்காக வந்த சமயத்தில் அவர் தெளிவான தமிழில் பேசி தமிழ் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனை குறித்து பேசியவர், “இதெல்லாம் பழைய ஆட்களுடைய அரசியல், நாம எல்லாரும் இளைஞர்கள், அதையெல்லாம் மறந்து நாம ஒன்னாகணும்”என்று தைரியமாக பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

யஷுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட ஹீரோயின்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
kiara advani to pair with yash in toxic movie

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு அடுத்த படத்திற்கு 1 வருடத்திற்கு மேலாக காலம் எடுத்து கொண்டார். இவரின் அடுத்த பட அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. 

கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டாக்சிக்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

kiara advani to pair with yash in toxic movie

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது கரீனா கபூர் யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஹீரோயினாக கியாரா அத்வானி கமிட்டாகியுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

“இதுபோன்ற சோகமான சம்பவங்கள் பயம் கொள்ள செய்கிறது” - யஷ் வருத்தம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
yash visited 3 fans passed away while his birthday celebration

கே.ஜி.எஃப் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்ற கன்னட நடிகர் யஷ். நேற்று அவரது பிறந்த தினத்தை, கர்நாடகாவில் அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர், பட்டாசு, கேக் வெட்டுதல் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள சரங்கி கிராமத்தில், இளைஞர்கள் 8 பேர் சேர்ந்து சுமார் 25 அடி உயரத்தில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க முற்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், அந்த கட் அவுட்டை நிற்க வைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அந்த பேனர், மேலே இருந்த மின்சாரக் கம்பியில் உரச, அதிலிருந்து மின்சாரம், கட் அவுட் வைத்திருந்த இளைஞர்கள் மீதும் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே ஹனுமந்த் (21), முரளி (20), நவீன் (19) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான மூவரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, யஷ் அந்த உயிரிழந்த ரசிகர்களின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீங்கள் முழு மனதுடன் எங்கிருந்து வாழ்த்தினாலும் அதுவே சிறந்த வாழ்த்தாக அமையும். இதுபோன்ற சோகமான சம்பவங்கள் எனது பிறந்தநாளையே கொண்டாட பயம் கொள்ள செய்கிறது. இப்படி காட்டுவது மனப்பான்மை அல்ல. தயவு செய்து உங்கள் அன்பை இப்படி காட்டாதீர்கள். பேனர்கள் வைக்காதீர்கள், பைக் சேஸ்கள் செய்யாதீர்கள், ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்காதீர்கள். என்னை ரசிப்பவர்களும் என்னுடைய ரசிகர்களும், என்னைப் போலவே வாழ்க்கையில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம்.

நீங்கள் என்னுடைய உண்மையான ரசிகராக இருந்தால், உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணித்து மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுங்கள். உங்கள் குடும்பங்களுக்கு நீங்கள்தான் எல்லாமே. அவர்களைப் பெருமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருங்கள். எனது ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்தி பிரபலமடைவதில் எனக்கு விருப்பமில்லை. என் ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்வதை எப்போதும் குறைத்துக் கொள்வேன். நீங்கள் என்னை மதிக்கிறீர்கள் என்றால், முதலில் பொறுப்பாக இருங்கள். இந்த ஆண்டு, கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், எனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பவில்லை. நம் முடிவில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதனால் தான், அதை எளிமையாக வைத்து, குடும்பத்துடன் மட்டும் கொண்டாட முடிவு செய்தேன்,'' என்றார். பின்பு உயிரிழந்த குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் உறுதி அளித்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து நலம் விசாரித்தார்.