அசுரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, அண்மையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய நடிகர் தனுஷ், நடித்த படங்களுக்கு, தயாரிப்பாளர்களிடமிருந்து சம்பளம் வாங்குவது பெரிய கஷ்டமாக இருக்கிறது என்று பேசினார். இதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், நடிகர் தனுஷின் மேனேஜர் இதுதொடர்பாக பேசியுள்ளார். அனைத்து தயாரிப்பாளர்களும் சம்பளத்தை சரியாக தருவதில்லை என்று தனுஷ் பேசவில்லை, அவர் நடித்த திரைப்படங்களை தயாரித்த சில தயாரிப்பாளர்களிடமிருந்து சம்பளம் வாங்குவது தான் கஷ்டமாக இருக்கிறது என்று தான் நடிகர் தனுஷ் பேசியதாக குறிப்பிட்டார். 12 திரைப்படங்களை சொந்தமாக தயாரித்துள்ள தனுஷ், அந்த படங்களில் வேலை பார்த்த லைட் பாய்களுக்குக் கூட சம்பள பாக்கி வைத்ததில்லை என்றும் அதே நேர்மையை தயாரிப்பாளர்களிடமிருந்து தனுஷ் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
சில படங்களில் சம்பளத்தை விட்டுக் கொடுத்து ஏமாந்து போயிருப்பதாகவும், அதையே சாக்காக வைத்து தயாரிப்பாளர்கள் சம்பளத்தை இழுத்தடிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சம்பளம் வராத படங்களையும் பகிரங்கமாக போட்டு உடைத்துள்ளார் வினோத். தயாரிப்பாளர்களுக்கு தனுஷ் எந்த உதவியும் செய்யாத மாதிரி பலர் பேசிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், `மரியான்' படத்தின் சம்பள பாக்கியை தனுஷ் இன்னும் கேட்கவே இல்லை என்றார். `மாரி' படத்தின் சம்பளமும் இன்னும் முழுதாக வரவில்லை என்றும், `கொடி' படத்துக்கான சம்பளம் 10 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகவும், `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில், இன்னமும் மூன்றே முக்கால் கோடி ரூபாய் சம்பளம் பாக்கி இருப்பதாகவும் வினோத் கூறியுள்ளார். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அந்த படங்களுக்கான டப்பிங்கை நடிகர் தனுஷ் பேசிக் கொடுத்துவிட்டதாக தனுஷ் தரப்பு விளக்கமாக வினோத் கூறியுள்ளார்.
இதுவரை 38 திரைப்படங்களில் நடித்துள்ள தனுஷ், காரை கூட தவணை முறையில் தான் வாங்கியுள்ளதாகவும், அதற்கான ஈஎம்ஐ தற்போது வரை கட்டிக் கொண்டிருப்பதாகவும் வினோத் தெரிவித்துள்ளார்.