Skip to main content

“அதை என் பரிகாரமாக நினைச்சுக்கிறேன்” - எமோஷ்னலான விஷால்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
vishal speecu at vijayakanth memorial meet

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் கமல், சத்யராஜ், சரத்குமார் எனத் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரும் விஜயகாந்த்தின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் விஷால் பேசுகையில், “எங்க சாமி விஜயகாந்த் அண்ணன் வாழ்ந்த பூமியில, வாழுகிற ஒரு மனிதனா...  மேதாவி விஜயகாந்த் நடிச்ச கலைத்துறையில ஒரு நடிகனா... அவருடைய ரசிகனா... தலைவரா கேப்டன் இருந்த நடிகர் சங்கத்தில நானும் ஒரு உறுப்பினரா, பொதுச் செயலாளரா... அது போக தேமுதிக கட்சிக்கு ஓட்டு போட்ட வாக்காளனா... எல்லா வகையிலும் நான் விஜயகாந்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு விஷயத்தில் எந்த பாரபட்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஊக்கமாக இருந்தவர் விஜயகாந்த். அந்த வழியில் வந்தவர்கள் என்ற முறையில் நாங்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டோம். விஜயகாந்த் மறைவின்போது நாங்க கூட இருந்திருக்கணும். நானும் ஊரில் இல்லை. கார்த்தியும் ஊரில் இல்லை. முதலில் அந்த குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.       

சண்முகப்பாண்டியன் கிட்ட ஒரே ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன். நிறைய நடிகர்கள் மேல் வர விஜயகாந்த் ஒரு தூணாக இருந்திருக்கிறார். நான் உங்க வீட்டு பிள்ளையாக சொல்கிறேன். உன்னோட படத்தில் நான் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் நான் வருகிறேன். அப்பா மாதிரி நீ பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பது என் ஆசை. அதை என் பரிகாரமா நான் நினைத்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலைவனை மிஸ் பண்றோம்” என எமோஷ்னலாக பேசினார். 

மேலும், “நான் ஓப்பனா சொல்கிறேன். சினிமாவில் ஈகோ என்ற விஷயம் எல்லாருக்கும் இருக்கும். இல்லாத மனிதர்கள் குறைவு. அதில் முன்னுதாரணமாக இருப்பது கேப்டன் விஜயகாந்த். திரைப்பட கல்லூரியில் இருந்து 54 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய உலக நாயகன் விஜயகாந்த். 54 பேர் வீட்டுலயும் விளக்கேற்றியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் கூட விஜயகாந்த் குறித்து குறை சொல்லமாட்டார்கள்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார். 

Next Story

“சாதியைத் தூக்கிப் பிடித்து எந்தக் காலத்திலும் படம் வந்தது கிடையாது” - ஹரி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
hari about caste related cinema in rathnam movir promotion

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். பின்பு திரையரங்கு ஒன்றில், ரசிகர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஒரு படம் நல்லாயிருக்கு என்றால் எந்த காலத்தில் ரிலீஸ் செய்தாலும் வருவோம் என வந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றியும் வாழ்த்துகளும். உங்களை மாதிரி ஆடியன்ஸ் இருக்கும் போது எங்களுக்கு நல்ல சினிமா எடுக்க வேண்டும் என தோன்றும். அந்த வகையில் என்னுடைய ரத்னம் படம் ரிலீஸாகிறது. முதல் முறையாக யோகி பாபு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். ரோட்ல ஒரு பொண்ணுக்கு பிரச்சனை என்றால் விடக்கூடாது. இந்தக் காலத்தில் போலிஸுக்கு பயந்து கொண்டு எதுவுமே பண்ணுவதில்லை. ஆனால் பிரச்சனை என்றால் தட்டி கேக்கணும். அந்த மாதிரி தட்டி கேட்கும் வேலையை தான் விஷால் படத்தில் பண்ணியிருக்கார்” என்றார்.     

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரத்னம் படம் ஆக்‌ஷம் படம் என்றாலும் எமோஷனலும் இருக்கும். அதனால் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். நாட்டில் எவ்வளவோ அநியாயம் நடந்துட்டு இருக்கு. நிறைய பேரு கெட்டவனா மாறிட்டான். சூழ்நிலை மாற வைக்கிறது. போதை பொருள்களும் புழக்கத்தில் சுத்திட்டு இருக்கு. இதனிடையே நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவங்கிட்ட இருந்து நல்லவங்கள காப்பாத்தனும். மனிதனுக்கு மனிதன் தான் எதிரி” என்றார்.  

அவரிடம் சாதி வைத்து படமெடுப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சாதியை மையமாக வைத்து எடுப்பது என்பதை, அவரவர்களுக்கு தெரிந்ததை வைத்து படமாக்குகிறார்கள் என்று தான் நல்ல நோக்கத்தோடு பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட ஊரை வைத்து படமெடுத்தாலே அங்கிருக்கிற சாதி, இயல்பாகவே கதைக்குள் வந்துவிடும். யாருமே வேணும் என்று சாதி வைத்து படமெடுப்பேன், என் சாதிக்காரன் மட்டும் பார்த்தால் போதும் என நினைப்பதில்லை. எல்லாருமே படம் பார்க்கணும். பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களும் படம் பார்க்க வேண்டும். 

சாதி உயர்ந்தது, சாதியை தூக்கிப் பிடியுங்கள் என யாருமே படமெடுக்க மாட்டார்கள். எந்தக் காலத்திலும் அப்படி வந்தது கிடையாது. படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் இருக்கும். அவன் அப்படித் தான் சாதி பற்றி பேசிட்டு இருப்பான். ஆனால் கடைசியில் மனம் திருந்துவது போல் தான் இருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை எல்லா இன மக்களும் வேலை பார்த்தால் தான் படமெடுக்க முடியும். எல்லா மக்களும் பார்த்தால் தான் ஒரு சினிமா வெற்றியடைய முடியும். அதனால் சினிமா என்பது மதம், சாதி, இனம், மொழி என எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது” என்றார்.