
தென்னிந்திய நடிகர் சங்க சட்ட திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் முடிவுகள் சில வழக்குகள் காரணமாக இரண்டரை ஆண்டு கழித்து 2022ல் வெளியானது. அப்போது வெற்றிபெற்று சங்கத்தை வழிநடத்தி வந்த நாசர் தலைமையிலான அணியின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. ஆனால் சங்க கட்டிடப் பணிகள் முடியும் வரை அடுத்த மூன்றாண்டுகளுக்கு இப்போதுள்ள நிர்வாகிகளே தொடரலாம் என கடந்த ஆண்டு நடந்த சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தேர்தல் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சங்க உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழில், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்த எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. நடிகர் சங்க கட்டிட பணிகளை சுட்டிக்காட்டி பதவி காலத்தை நீட்டிக்க முடியாது. பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்திற்கும் விரோதமானது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட்டு தேர்தல் நடத்தும் வரை தற்போதைய நிர்வாகிகள் முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனு தொடர்பாக சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் ஜூன் 4ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. நீதிமன்றத்தின் உத்தரவின் படி நடிகர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் விஷால் இன்று பதில் மனுதாக்கல் செய்தார். அதில் ‘புது சங்க கட்டுமானப் பணிகள் ரூ.25 கோடி செலவில் தொடங்கப்படு தற்போது அதன் 60 சதவிகித பணிகள் முடிவடைந்துவிட்டது. சங்க விதிப்படி புதிய தேர்தலுக்கான வேலைகள் தொடங்கப்பட்டால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுமென்பதால் பொதுக்குழு கூட்டத்தில் தற்போதுடைய நிர்வாகிகளே மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடரலாம் என அவர்களது பதவிக்காலம் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
பொதுக்குழுவுக்கு உட்சபட்ச அதிகாரம் இருக்கிறது. பதவிக்கால நீட்டிப்பில் எந்த ஒரு விதி மீறலும் இல்லை. விதிகளுக்கு உட்பட்டுத்தான் 300 உறுப்பினர்கள் வரை ஒரு மனதாக கையெழுத்து போட்டார்கள். அதற்கான ஆவணம், பதிவுத்துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கு உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. விஷாலின் பதில் மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகின்ற 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.