Skip to main content

தடையை உடைத்து வெளியாகும் விஷால் திரைப்படம்!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

vishal

 

இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாக இருந்தது. இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான 'ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்', சக்ரா வெளியீட்டிற்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்து அந்நிறுவனம் அளித்த புகார் மனுவில், 'தங்கள் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்த கதையை இயக்குநர் ஆனந்தன், விஷாலை வைத்துப் படமாக்கியுள்ளார். இது காப்புரிமைச் சட்டத்திற்கு விரோதமானது எனக் குறிப்பிட்டிருந்தது.

 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்கக்கோரி இயக்குநர் ஆனந்தன் மற்றும் நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், சக்ரா பட வெளியீட்டிற்கு இடைக்காலத் தடையும் விதித்து உத்தரவிட்டது.

 

இந்த நிலையில், இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 'ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதாக விஷால் தரப்பு கூறியதால், சக்ரா படத்திற்கு விதித்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், சக்ரா படம் திட்டமிட்டபடி நாளை வெளியாக உள்ளது. இந்தச் செய்தியறிந்து உற்சாகமான விஷால் ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

இது குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உண்மை எப்போதும் வெல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்