'லத்தி' படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்த படக்குழு, நடிகை அபிநயா 'வேதா' என்ற கதாபாத்திரத்திலும், மலேசிய நடிகர் டிஎஸ்ஜி ‘தங்கராஜ்’ என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக அவர்களது கேரக்டர் போஸ்டரை வெளியிட்டனர். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும்நிலையில் நேற்று இரவு லாரி சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது டம்மி லாரியை வைத்து படமாக்கி வந்ததையடுத்து எதிர்பாராத விதமாக அந்த லாரி அருகில் மோதி விபத்துக்குள்ளானது. பின்பு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. விபத்தில் தன்வாய்ப்பாகயாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த நிலையில் விஷால் இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜஸ்ட் மிஸ். சில நொடிகளில் சில அங்குலங்களில் என வாழ்க்கையை தவறவிட்டிருப்பேன். இந்த சம்பவத்தை கடந்துவிட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.