ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பையில் சில தினங்களாக நடைபெற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ‘கூலி’ படம் மூலம் ரஜினி கைகோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இம்மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூலி படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘உங்களை மீண்டும் இப்படத்திற்காக இணைத்ததில் மகிழ்ச்சி‘ என தெரிவித்து கிரிஷ் கங்காதரனை டேக் செய்துள்ளார். மேலும் அவர், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஏற்கெனவே, கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘விக்ரம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.