நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கடந்தநவம்பர் 18 ஆம் தேதி காய்ச்சல் காரணமாகச் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகத்தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்தத்தகவல் முற்றிலும் பொய்யானது என மறுத்தமருத்துவமனை நிர்வாகம் அவரின் உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ளது.
மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனையால் வெளியிட்ட அறிக்கையில், 'காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவரின் அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகு விஜயகாந்த் வீடு திரும்புவார்' எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து மியாட் மருத்துவமனை மீண்டும்அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “விஜயகாந்த்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.