விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு மகாலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இருப்பினும் அதிக மதிப்பெண்கள் எடுத்த சிலரை விஜய் இயக்கத்தினர் தவறவிட்டதாகச் செய்திகளும் வெளியானது. இந்த நிகழ்ச்சி அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது. மேலும் அவரது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி, விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இலவச உணவு, ரத்ததானம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். மதுரையில் உள்ள ரசிகர்கள் சற்று வித்தியாசமாக, வெயில் மழை என்று பாராமல் மக்கள் தேவைக்காக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு 220 ரூபாய்க்கு பெட்ரோல், அவர்கள் பசி போக்கும் வகையில் அவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்கள்.
இந்நிலையில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அவர் கைப்பட ஒரு நன்றி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "கடத்த ஜூன் 22 அன்று எனது பிறந்த நாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக அறிந்தேன். உங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.