சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் இப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொதுவாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா பெரிய அளவில் நடைபெறும். வழக்கமாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். காரணம் என்னவென்றால் விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கான குட்டி ஸ்டோரியுடன் அரசியலையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போவார். அடுத்தநாள் அவரின் பேச்சுக்கள் பெரும் விவாதத்தை உண்டாக்கும். ஆனால் அப்படியான நிகழ்வு பீஸ்ட் படத்திற்கு நடக்காத நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் கொடுத்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பாக விஜய் அளித்த பேட்டியில்,"எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. கோவில் தர்கா, தேவாலயம் என அனைத்திற்கும் செல்வேன். எனக்கு எல்லாமே ஒண்ணுதான் என்றார். அப்பாக்கள் ஒரு குடும்பத்தின் வேர். கடவுள் கண்களுக்கு தெரியமாட்டார். அப்பா கண்களுக்கு தெரிவார். இதுதான் அப்பாவுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.
மகன் சஞ்சய் குறித்து பேசிய விஜய், "அவர் நடிக்க போகிறாரா,இல்லை கேமராவுக்கு பின்னால் இருந்து இயக்கப் போகிறாரா என்று தெரியவில்லை. ஒரு நாள் பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் சஞ்சய்க்காக கதை சொல்ல வந்தார். அந்த கதை எனக்கு பிடிச்சிருந்தது. இத அவன் பண்ணனும் னு ஆசைப்பட்டேன். ஆனால் இதை அவன் கிட்ட சொன்னதற்கு இப்போது வேண்டாம் இரண்டு வருடங்களுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றான். நானும் அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்த பேட்டியில் தளபதி எப்போது தலைவனாக போகிறார் என்ற கேட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய், "என்னை தளபதியாக மாற்றியது ரசிகர்கள்தான். நான் தளபதியாக இருக்க வேண்டுமா இல்லை தலைவனாக மாறவேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும் தான் முடிவு செய்யவேண்டும். எனக்கு விஜய்யாக இருக்கத்தான் பிடிக்கும்" எனத் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த பதிலைக் கேட்ட ரசிகர்கள் விஜய் கட்டாயம் அரசியலுக்கு வருவது உறுதி என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.