நடிகர் விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.
இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் நிலையில் விஜய் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சூழ கூட்ட நெரிசலைத் தாண்டி ஒரு வழியாக நிகழ்வு நடைபெறும் விடுதிக்கு வந்துள்ளார்.
விஜய்யை பார்த்த பிறகு அரங்கில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். நிகழ்வு தொடங்கிய நிலையில் விருது கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பின்பு மேடைக்கு வந்த விஜய் பேசுகையில், அவரது விருப்பமான வசனத்துடன் 'என் நெஞ்சில் குடியிருக்கும்...' எனத் தொடங்கினார். தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். மேலும் அவர்களது பெற்றோர், மக்கள் மன்ற நிர்வாகிகள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், "நான் நிறைய ஆடியோ மற்றும் விருது விழாவில் பேசியிருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு நிகழ்வில் பேசுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறன். மனசுக்குள் ஏதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி உணர்கிறேன். வருங்கால இளம் நம்பிக்கை நட்சத்திரங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரிய சந்தோசம்.
உன்னில் என்னை காண்கிறேன் என்ற ஒரு வாசகம் இருக்கு. உங்களை பார்க்கும்போது என்னுடைய பள்ளிப் பருவம் ஞாபகத்தில் வந்து போகின்றன. நான் உங்களை மாதிரி ஒரு நன்கு படிக்கின்ற மாணவன் கிடையாது. ஒரு ஜஸ்ட் பாஸ் மாணவன் தான். என்னுடைய கனவு எல்லாம் சினிமா தான். அதை நோக்கித் தான் என்னுடைய பயணம் தொடர்ந்தது" எனப் பேசினார்.