விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதற்கான ஆரம்பக் கட்ட பணிகளில் லோகேஷ் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பெயரில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத கணக்கு இயங்கி வந்துள்ளது. இதில் விஜய்யின் அடுத்த படத் தகவல்கள் பற்றி அறிவிப்புகளை வெளியிடுவது போல் பதிவுகள் இடம்பெற்றுள்ளது. இந்த கணக்கு போலிக் கணக்கா, உண்மை கணக்கா என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் தற்போது அதற்கான தீர்வு கிடைத்துள்ளது.
அதன் படி இந்த கணக்கு போலிக் கணக்கு எனத் தெரியவந்துள்ளது. இதனை விஜய்யின் மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை. எனவே, போலிக் கணக்குகளை ஊக்குவிக்கவோ, வெளியிடவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.