'காத்துவாக்குல இரண்டு காதல்' படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'விக்ரம்' படம் ஜூன் 3-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தொடர்ந்து தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார். இதனிடையே மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். 'காந்தி டாக்ஸ்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படம் வசனமே இல்லாமல் சைலன்ட் படமாக டார்க் காமெடி ஜானரில் உருவாகிறது. இந்த படத்தில் அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'மூவி மில் என்டர்டைன்மெண்ட்' மற்றும் 'ஜி ஸ்டுடியோஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இந்நிலையில் 'காந்தி டாக்ஸ்' படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்கள். இந்த படத்தை பற்றி இயக்குநர் கூறுகையில்,"சமூகத்தில் நடக்கும் முதலாளித்துவம் மற்றும் இனவெறியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை இந்த படம் ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
தமிழில் பேசும் படங்கள் வர ஆரம்பித்த பிறகு முதல் முறையாக வசனம் இல்லாமல் 1987-ஆம் ஆண்டு கமல் நடிப்பில் 'பேசும் படம்' வெளிவந்தது. பின்பு பிரபு தேவா நடிப்பில் 2018-ஆம் ஆண்டு 'மெர்க்குரி' வெளியானது. அதன் பிறகு தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் 'காந்தி டாக்ஸ்' உருவாகிறது. இந்தியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.