Skip to main content

மத்திய சிறை நூலகம்; திட்டத்தை அறிந்து விஜய் சேதுபதி நன்கொடை

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

vijay sethupathi donates 1000 books for Madurai Central Jail Library

 

தென்னிந்திய மொழிகளைத் தாண்டி பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில், தமிழில் விடுதலை, இந்தியில் ஜவான், மும்பைக்கார், மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகின்றன. இதில் விடுதலை படத்தின் முதல் பாகம் நாளை (31.03.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இந்த நிலையில், மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்களை வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி. இந்த புத்தகங்களை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் ஆகியோரிடம் விஜய்சேதுபதி வழங்கினார். சிறைக் கைதிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக சிறை நூலகத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 1 நாளில் 1 லட்சம் புத்தகங்கள் நன்கொடைகளாகப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரையில் படப்பிடிப்பிற்காக வந்த விஜய் சேதுபதி இந்த திட்டம் குறித்து அறிந்து புத்தகங்களை வழங்கியுள்ளார். 

 

சமீபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிராக போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில், கையெழுத்திட்டு தன்னுடைய ஆதரவை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற  சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சிறைத்துறை மற்றும் சீர்திருத்த துறை சார்பாக வைக்கப்பட்டிருந்த 'கூண்டுக்குள் வானம்' எனும் அரங்கில் கைதிகளுக்கு பயன்படும் வகையில் புத்தகங்களைத் தானமாக பொதுமக்கள் கொடுத்தால் அதை கைதிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் மூலமும் சிறைவாசிகளுக்கு புத்தகம் அனுப்பப்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.