Skip to main content

மேடையில் கண்கலங்கிய விஜய்சேதுபதி!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021
bdsbsdbsd

 

விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7சிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி, சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குநர் சங்கர் நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனின் உதவியாளரான ஆலயமணி விழாவிற்கு வருகைத் தந்தவர்களை நெகழ்ச்சியுடன் வரவேற்றார். முன்னதாக மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் அவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி பேசியபோது....

 

''இங்கு வருகை தந்து சிறப்பித்த அனைவரும், மறைந்த இயக்குநர் ஜனநாதனின் நினைவுகளை வார்த்தைகளாக மாற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. வரவேற்புரை பேசத் தொடங்கி, உணர்வு மிகுதியால் தொடர்ந்து பேச இயலாத ஆலயமணி அவர்களின் உணர்வுதான் அனைவருக்கும். ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வாய்ப்பு தேடிய காலகட்டத்திலிருந்து அவரை சந்தித்தது முதல் அவரது மறைவு வரையிலான இந்தக் காலக்கட்டம் மறக்க முடியாதது. அவருக்கும் எனக்கும் இடையிலான உறவையும் வார்த்தைகளால் குறிப்பிட இயலாது. அவரின் மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றி கூடுதலாக அறிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

 

எனக்கும் அவருக்குமான உறவு தந்தை மகன் போன்றதொரு உறவு. அருகில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது. தூரத்திலிருந்து நான் அவரை நேசித்துக்கொண்டே இருந்தேன். காலம் இப்படி படு பாதகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரைப் பற்றி தெரிந்திருந்தால், புரிந்துகொண்டிருந்தால். அவருடன் நிறைய நேரம் செலவிட்டிருப்பேன். அவருடன் நன்றாக பழகத் தொடங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் அதிகமாக அன்பு பரிமாற்றம் நடந்திருக்க வேண்டும் என தற்போது நினைக்கிறேன். சில நேரங்களில் மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதைப் பயன்படுத்தியிருக்கலாம். நான் அதைத் தவறவிட்டிருக்கிறேன். யாராவது உங்கள் மீது அன்பு பாராட்டினால், அவர்களை நீங்கள் புரிந்துகொண்டால், அவரிடம் சென்று நிறைய நேரத்தை செலவிடுங்கள் அன்பைப் பயன்படுத்தி உறவை மேம்படுத்துங்கள்.

 

mjfmfmf

 

இந்தப் படத்தில் பணியாற்றியது அற்புதமான அனுபவம் என அனைவரும் தெரிவித்துவிட்டனர். இதைக் கடந்து என்னிடமும் இதைப் பற்றி கூற புதிய வார்த்தை எதுவும் இல்லை. இந்தப் படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், அது அதன் முழு பொறுப்பும் தலைவர் ஜனநாதனையே சேரும். இங்கு பேசும்போது ஆர்.கே. செல்வமணி, ஜனநாதனின் தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றிய கதையைப் படமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் என்னுடைய அனுபவத்தின்படி ஜனநாதன் ஒரு கதையை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி மாற்றி யோசித்து எழுதக்கூடிய படைப்பாளி. ஒவ்வொரு படத்திலும் பெரும் மாற்றங்களை செய்துகொண்டே இருப்பார். படத்திற்காக உழைத்துக்கொண்டே இருப்பார். புதிய புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டு அதனைப் படைப்பில் இணைத்துக்கொண்டே செல்வார். அதனால் அவர் எழுதிய தஞ்சாவூர் கோயில் பற்றிய கதையைப் படமாக்குவதற்கான திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால், அவர் பணியாற்றும் ஸ்டைல் எனக்குத் தெரியும். தினமும் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருப்பார். அதனால் இதுதான் கிளைமாக்ஸ், இதுதான் இடைவேளை காட்சி, இதுதான் வசனம் என்று எந்த வரையறையும் அவரிடம் இருக்காது. அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். படப்பிடிப்பில் ஒரு வசனம் பேசியிருப்போம் அதனை பின்னணி பேசும்போது மாற்றி பேச வைத்து காட்சியின் சுவையை மேம்படுத்தியிருப்பார். அதனால் அவரை எளிதில் கணிக்க முடியாது.

 

இப்படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுகக்குமாரை எனக்கு 12 ஆண்டுகளாக தெரியும். இதுவரை நான் நான்கு படங்களைத் தயாரித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் பட்ஜெட் என்ன என்று எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்துகொள்வதிலும் ஆர்வம் இல்லை. ஏனெனில் அதைத் தெரிந்துகொள்வதில் அக்கறை காட்டினால், என்னுள் இருக்கும் கலை இறந்துவிடும் என்ற பயம் எனக்குள் இருக்கிறது. இது என்னுடைய சொந்தப் பிரச்சனை. இதனால் பண வரவு விஷயத்தில் நஷ்டத்தை எதிர்கொள்ளலாம். ஆனால், தொழில் பலவீனம் அடைந்தால், என்னால் தாங்கிக்கொள்ளவே இயலாது. அத்துடன் என்னால் ஒருபோதும் என்னை இழக்க முடியாது. என்னுடன் என்னுடைய பள்ளிக்கூடத் தோழன் சந்திரசேகர் இருக்கிறார். அவர்களிடம் இந்தப் பொறுப்பை விட்டுவிடுகிறேன். இந்தப் படத்தில் நான் சம்பளமாக எதையும் பெறவில்லை, எடுக்கவும் இல்லை. இந்தத் திரைப்படம் நல்லபடியாக வெளியாக வேண்டும். என்னுடைய தாய், தந்தையர், தாத்தா பாட்டி போன்றவர்கள் செய்த புண்ணியத்தால் ‘லாபம்’ படத்தில், ஜனநாதன் சார் இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.

 

ஜனநாதன் சார் ‘திரைப்படத்தை பொழுதுபோக்கு’ என்று சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டார். திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற எல்லையும் கடந்து, பார்வையாளர்களை ஏதேனும் ஒரு விஷயத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை திரைப்படத்தைப் பார்க்கும் பலரும் பல தருணங்களில் இந்தக் காட்சி என்னை மாற்றியது, இந்தக் காட்சி என்னை யோசிக்கத் தூண்டியது, இந்தக் காட்சி என்னை மனிதனாக்கியது என சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அது எந்த மொழி படமாக இருந்தாலும் பரவாயில்லை. திரைப்படம் ஏதோ ஒருவகையில் நம்மில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. உலகம் முழுவதும் மனிதனின் உணர்வுகள், ஒரே வகையான தாக்கத்தை ஏற்படுத்தி நம் மனதைத் தொடுகிறது. அதனால் திரைப்படம் என்பது சாதாரண பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது அதையும் கடந்து ஏதேனும் ஒரு பாதிப்பை மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிறது. மக்கள் சிந்திக்க வேண்டியவற்றை பிரதானமாக எடுத்துச் சொல்வது கலை வடிவங்கள்தான். ஒரு நகைச்சுவை காட்சி கூட ரசிகர்களை யோசிக்க வைக்கும். அதனால் கலையை சாதாரண பொழுதுபோக்கு அம்சம் என்ற கோணத்தில் மட்டும் அணுகாதீர்கள்.

 

bdhdbhdx

 

கலை என்னை சிந்திக்க வைத்தது. அதனால் இத்துறையில் அடி எடுத்து வைத்தேன். இதுதான் என்னுடைய வாரிசுகளுக்கும் கற்றுக்கொடுக்கிறேன். அதனால் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று மட்டும் விமர்சிக்காதீர்கள். அதிலிருக்கும் எந்த சிந்தனை சிறந்தது? எது பலவீனமாக இருக்கிறது? என்பதை உணர்ந்து, திறனாய்வு செய்ய பழகிக்கொள்ளுங்கள். என்னுடைய வாரிசுகளுக்கு இதைத்தான் நான் கற்றுக்கொடுக்கிறேன். ஒரு விஷயத்தை குறை சொல்வதன் மூலமாக நம்மை நாமே புத்திசாலிகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது. இங்கு ஒருவரை குறை சொன்னால் நான் புத்திசாலி ஆகிவிடுகிறேன். கலை மனிதனை சிந்திக்க வைக்கிறது. அதனால்தான் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு அது இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

 

மேலும், இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்வதைவிட, மறைந்த இயக்குநரும் என்னுடைய தலைவருமான இயக்குநர் ஜனநாதன் பல்வேறு பேட்டிகளில் சொன்னதை நான் இங்கு குறிப்பிடுகிறேன்... ''சேத்துல கால் வச்சாதான் சோத்துல கை வைக்க முடியும் என விவசாயத்த பத்தி சொல்லி சுருக்கிட்டாங்க. நான் விவசாயத்தை எப்படி பார்க்கிறேன்னா.. பிரிட்டிஷ்காரன் இந்தியாவுக்கு வந்தததே.. இந்தக் கிராம பகுதியில் நடக்கிற விவசாயத்தைப் பார்த்துதான். தங்கம் மாதிரி பொருளாய் இருந்தா.. அவன் எப்பவோ எடுத்துட்டுப் போயிருக்கலாம். ஆனா இந்த மண்ணுல முன்னூறு நானூறு வருஷமா பருத்தியை எடுத்துக்கிட்டே இருக்காங்க; கரும்பை எடுத்துகிட்டே இருக்காங்க. இதுக்கு உலக அளவுல மார்க்கெட் இருக்கிறதால.. இன்னும் கூட எடுத்துகிட்டு இருக்காங்க. இந்தியா முழுக்க சுமார் 2000 சர்க்கரை ஆலை இருக்கு.. இவை அனைத்தும் கரும்பை மூலப்பொருளாக வைத்துதான் இயங்குது. இந்தக் கரும்பிலிருந்து வர்ற சர்க்கரை, சர்க்கரையிலிருந்து வர்ற மொலாசஸ், மொலாசஸிருந்து வர்ற ரம், ஜின், பிராந்தி, பால் கலந்த சாக்லேட், இதுல வர்ற மின்சாரம், அத தொழிற்சாலைக்குப் பயன்படுத்திய பிறகு மீதமுள்ள மின்சாரத்தை விற்பனை செய்வது, கரும்பு சக்கையிலிருந்து பேப்பர் தயாரிப்பது என எல்லாமே விவசாயத்தில் இருந்துதான் கிடைக்கிறது.’

 

‘பஞ்சாலை, கரும்பாலை என விவசாயத்திலிருந்து வர்ற எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, வேஸ்டேஜ் அப்டின்னு ஒன்னும் இல்ல. பல நாடுகள் தங்களுடைய வேஸ்டேஜ் கொட்றதுக்குன்னு சில நாட்ட செலக்ட் பண்ணி பயன்படுத்தறாங்க. நம்ம நாட்டுக்கும் கன்டெய்னர் கன்டெய்னரா ஏராளமான வேஸ்ட் அனுப்புறாங்க.’‘ அதனால விவசாயத்தை நம்பி பல தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கு. கோடிக்கணக்கான பணம் புழங்கிக்கொண்டிருக்கு. சோத்துப் பிரச்சனை இல்லை. வெளவிச்சு பயிரிட்ட விவசாயி, அதுல உருவான பாட்டில வாங்கி குடிக்க சாய்ந்தரம் ஆனதும் க்யூவுல போய் நிற்கிறான். இது என்னுடைய உற்பத்தியில செஞ்சு வர்ற பொருளிலிருந்துதான் பீராவும், பிராந்தியாவும் இங்க வித்து லாபம் சம்பாதிக்கிறாங்கன்னு விவசாயிக்குத் தெரியல. அதைதான் இந்தப் படம் சொல்லுது'' என்றார்.

 

அனைத்தையும் கடந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளைத் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி. இது ‘லாபம்’ படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. திரைத் தொழில் என்பது பல லட்சம் குடும்பங்களின் உழைப்பை உள்ளடக்கியது. இவர்களின் அனைவரின் சார்பாகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் திரையரங்குகளுக்கு வரவிருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வருக! வருக! என மனமார வரவேற்கிறேன்" என உருக்கமாகப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரைக் கொடுக்கவும் எடுக்கவும் தயங்காத 'ஜவான்' - டிரைலர் வெளியீடு!

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Jawan | Official Tamil Trailer | Shah Rukh Khan | Atlee | Nayanthara | Vijay S | Deepika P | Anirudh

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. அதில் இப்படம் இந்தாண்டு ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்த நிலையில், அண்மையில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்தது. 

 

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை ரெட் சில்லீஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதைப் பார்க்கையில், பிரமாண்ட காட்சிகளோடும் ஆக்‌ஷன் நிறைந்த ரிவெஞ்ச் ட்ராமாவாக பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஷாருக்கானின் ஹீரோயிசம், நயன்தாராவின் ஸ்டைலிஷ் தோற்றம், விஜய் சேதுபதியின் வில்லனிசம், எனப் படத்திற்கு ஆர்வம் தூண்டும் வகையில் இந்த டிரைலர் அமைந்துள்ளது. இந்த டிரைலர் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

 

 

Next Story

“சொந்த வசனத்தை சேர்த்துக்கொள்ள இந்த இயக்குநர் அனுமதிப்பார்” - அனுபவம் பகிரும் பக்ஸ்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Bagavathi Perumal  interview

 

பல படங்களில் தன்னுடைய குணச்சித்திர நடிப்பினால் நம்மை ஈர்த்த நடிகர் பக்ஸ் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...

 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்காக நாங்கள் பல மாதங்கள் ரிகர்சல் செய்தோம். அதனால் ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் பலமுறை நடித்துப் பார்த்தோம். படத்தில் எப்போதும் நாங்கள் விஜய் சேதுபதியோடு இருப்பது போன்று எங்களது கேரக்டர்கள் அமைந்தன. அந்தப் படத்தின் கதை பல்வேறு மொழிகளில் வெற்றி பெற்றது. ஜிகர்தண்டா படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். என்னுடைய நடிப்பை கார்த்திக் சுப்புராஜ் வெகுவாகப் பாராட்டினார். 96 படமும் சிறந்த ஒரு அனுபவம். இயக்குநர் பிரேம் நல்ல நடிப்பிற்கு முக்கியத்துவம் தருவார்.

 

நானும் விஜய் சேதுபதியும் ரொம்ப க்ளோஸ் நண்பர்கள் என்று பலர் நினைக்கின்றனர். நாங்கள் நல்ல நண்பர்கள் தான். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை ஃபோனில் பேசுவதே பெரிய விஷயம். 96 படத்தில் என்னுடைய நடிப்பை அவர் மிகவும் பாராட்டினார். அவ்வப்போது பேசினாலும் சிறந்த ஒரு நண்பர் அவர். தியாகராஜன் குமாரராஜாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அந்த வாய்ப்பு சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனக்கு கிடைத்தது. அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஒரே படத்தில் எனக்கு நிறைவேறியது.

 

ஃபகத் பாசில் சிறந்த ஒரு நடிகர். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவரோடு நடித்தது அருமையான அனுபவம். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தபோது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா என்னுடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பார். சில சொந்த வசனங்களையும் சேர்த்துக்கொள்ள அனுமதிப்பார். படத்தை மெருகேற்றுவதே அவருடைய நோக்கம். அதனால் அந்த படப்பிடிப்பு மிகவும் நல்ல ஒரு அனுபவமாக இருந்தது.