Skip to main content

“ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” - விஜய் சேதுபதி மகிழ்ச்சி

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

vijay sethupathi at 54th goa international film festival

 

54வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் நேற்று (20.11.2023) பிரம்மாண்டமாகத் தொடங்கியது. தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதோடு பிலிம் பஜாரையும் அமைச்சர் திறந்து வைத்தார். இதனிடையே மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்திற்கு சினிமாவின் சிறந்த பங்களிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. நவம்பர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 270க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியன் பனோரமா பிரிவில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'காதல் என்பது பொதுவுடைமை', சம்யுக்தா விஜயன் இயக்கிய 'நீல நிற சூரியன்' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. சத்யஜித்ரே பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த ஆண்டு ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸிற்கு வழங்கப்படுகிறது.

 

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த மவுன படமான ‘காந்தி டாக்ஸ்’ திரையிடப்பட்டது. கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கியுள்ள இப்படத்தில் அதிதி ராவ், அரவிந்த சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவா சென்றுள்ளார் விஜய் சேதுபதி. பின்பு நிகழ்ச்சி அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, “என்னுடைய இரண்டு படங்கள் இதில் திரையிடப்படுகின்றன. விடுதலை மற்றும் காந்தி டாக்ஸ். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. மற்ற படங்களையும் பார்க்க ஆவலாக வந்துள்ளேன்.

 

சினிமா என்பது அழகான மொழி. அது பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு மாற்றுகிறது. புதிய கலாச்சாரங்களை அறிமுகப்படுத்துகிறது. உணர்ச்சிகளை பிரதிபலிக்கிறது. மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்றும் சொல்கிறது. பார்வையாளர்களும் புது அனுபவத்தைப் பெறுகிறார்கள். எனவே இது ஒரு அற்புதமான ஊடகம். இந்த துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன், குறிப்பாக ஒரு நடிகராக. அதனால் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வருகிறேன்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

Next Story

“பச்சை துரோகம்” - விஜய் சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vijay sethupathi election video

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் அன்றே நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தி.மு.க, காங்கிரஸ், இடது சாரிகள், வி.சி.க, உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனி கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க தேசிய ஜனநாயக கூடணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதையொட்டி தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விஜய் சேதுபதி வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பேசியதாவது, “நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தா நமக்கென்ன... இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்... ஒட்டு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை... இது போன்ற மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.   

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. 

நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலைத் பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்க, என்ன சொல்றாங்க என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க. இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்க” என்றார்.