
கன்னட திரையுலகில் 35 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் சிவராஜ்குமார். இவர் தற்போது ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘பைராகி’ படத்தில் நடித்துவருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவரும் இந்த ஆக்சன் கமர்ஷியல் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் குறித்தும் இயக்குநர் விஜய் மில்டன் குறித்தும் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார் கூறியபோது...
"நான் தமிழ் சினிமாவின் தீவீர ரசிகன். தொடர்ந்து தமிழ்த் திரையுலகைக் கவனித்துவருகிறேன். அங்கு வெளியாகும் அனைத்து படங்களையுமே உடனடியாக பார்த்துவிடுவேன். நடிகர் கமல் சாரின் தீவிர ரசிகர் நான். அவரது படங்களை முதல் நாளிலேயே பார்த்துவிடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச் சிறப்பான படங்களைச் செய்துவருகிறார். தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும் பிடித்தமான விஷயம். இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்குத் தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறியபோது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசான ஆக்சனைக் கலந்து அற்புதமான கதை இருந்தது தெரிந்தது.
எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இது இருக்கும். விஜய் மில்டன் கேமராமேனாக இருந்து, கஷ்டப்பட்டு உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதால், சினிமா குறித்த தேர்ந்த அறிவு அவரிடம் கொட்டிக்கிடக்கிறது. எதையும் எளிமையாகச் செய்துவிடும் திறமை அவரிடம் இருக்கிறது. மக்கள் 35 வருடமாக என்னைக் கொண்டாடிவருகிறார்கள். அவர்களின் அன்புக்கு உண்மையாக உழைக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் ரசிக்கும்படி படங்கள் தர கடினமாக உழைப்பேன். இந்தப் படமும் அவர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும்" என்றார்.