நடிகர் விஜய், படங்களை தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக நின்று 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை மற்றும் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்த நாளன்று தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அண்மையில் விஜய் ரசிகர்கள் விலையில்லா விருந்து திட்டம் மூலம் உணவு வழங்கி வரும் நிலையில் அவர்களை அழைத்து பாராட்டினார்.
இந்த நிலையில் விஜய் இன்னொரு புது முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து பரிசளிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி வெளியான நிலையில் 10 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியான பிறகு முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.