Vijay immediately fulfilled the students request

விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.

Advertisment

இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிலையில், மேடையில் பேசிய விஜய் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கல்வி குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். பின்பு சாதித்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

Advertisment

அப்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் இடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கீர்த்தி வர்மா எனும் மாற்றுத்திறனாளி மாணவர்தன் காலால் விஜய்யின் புகைப்படத்தை வரைந்த ஓவியத்தை விஜய்க்கு கொடுத்தார்.

பிறகு மேடைக்கு வந்த மாணவன் ஒருவர்தற்காப்பு கலை பயிற்சி செய்து காண்பித்தார். அதைப் பார்த்த விஜய் வியப்படைந்து அவரைக் கட்டியணைத்து பாராட்டினார். இதையடுத்து சான்றிதழை வாங்க பாட்டியுடன் வந்த மாணவி விஜய்க்கு ஒரு கோரிக்கை வைத்தார். "எல்லா மாணவர்களின் வெற்றிக்கு காரணமாக அவர்களது பெற்றோர் இருப்பார்கள். ஆனால் எனக்கு என் பாட்டி தான் காரணமாக இருந்தார். அதனால் என் பாட்டிக்கு சால்வை அணிவிக்க வேண்டும்" எனக் கோரினார். இதைக் கேட்ட விஜய் உடனடியாக ஒரு சால்வையை அருகில் இருந்த பாட்டிக்கு அணிவித்து மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றினார்.

Advertisment