vijay with his parents sa chandrasekhar and sobha

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இறுதிகட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் விஜய்க்கான வி.எஃப்.எக்ஸ் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் விஜய் இரண்டு பாடல்கள் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா ஒரு நிகழ்சியில் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் நடித்து கொண்டே தமிழகவெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் வழிநடத்தி வருகிறார். அதன் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் சந்திக்கவுள்ளார். மேலும் நாளை உலக பட்டினி தினத்தையொட்டி அன்னதானம் செய்ய தனது கட்சியினருக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் விஜய் தனது பெற்றோரை இன்று சந்தித்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா மற்றும் விஜய் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு பெற்றோருடன் விஜய் இருக்கும் புகைப்படம் தற்போது முதல் முறையாக வெளியாகியுள்ளது.

Advertisment