Skip to main content

'ரஞ்சிதமே...' - விஜய்யின் வீட்டின் முன்பு மண்டியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

vijay fans waiting for vijay in nelankarai house

 

நடிகர் விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக நின்று 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

 

டாக்டர். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம், அம்பேத்கர் சிலை மற்றும் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்த நாளன்று தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அண்மையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு வேளை மதிய உணவு இலவசமாகப் பல்வேறு இடங்களில் வழங்கினர்.

 

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கவுள்ளார். இதற்காக மாணவ மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் என 1500க்கும் மேற்பட்டவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் கல்வி விருது விழா நிகழ்வு தொடங்கவுள்ளது. மேலும் ‘கல்வி அழியாத செல்வம்’ என்ற வாசகத்துடன் திருவள்ளுவர் புகைப்படமும் மேடையில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வருபவர்களுக்குக் காலை, மதிய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

விஜய்யின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள் அவரது நீலாங்கரை வீட்டின் முன் குவிந்துள்ளனர். அங்கு ஒரு ரசிகர் வீட்டின் கேட்டின் முன்பு மண்டியிட்டு கும்பிடுகிறார். மேலும் அங்குள்ள சிசிடிவியை பார்த்து 'ரஞ்சிதமே...' பாடலில் வரும் ஸ்டெப்பை போட்டு தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோன்று சமீபத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து வந்த ஒரு ரசிகை அவரை பார்க்க வேண்டும் எனக் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்