விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு மகாலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் பேச்சு அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது. மேலும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதை முடித்துவிட்டு சினிமாவில் பெரிய இடைவெளி எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதே சமயம் வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து செயல்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.