Skip to main content

"முன்பை விட சந்தோசத்தை உணர்கிறேன்" - மீண்டெழுந்த விஜய் ஆண்டனி 

 

vijay antony health update

 

விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'ரத்தம்', 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலை' ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விஜய் ஆண்டனியின் ஹீரோ பயணத்தில் ஒரு முக்கியப் படமாக அமைந்தது பிச்சைக்காரன். இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று ப்ளாக்பஸ்டர் வெற்றி அடைந்தது. 

 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'பிச்சைக்காரன் 2' படத்தை தயாரிப்பது மட்டுமின்றி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு கோலாலம்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 

 

இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் படக்குழுவினரும் இயக்குநர் சுசீந்திரனும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து விஜய் ஆண்டனி, ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்து அந்த காயத்திலிருந்து பத்திரமாக மீண்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில், உடல் நலம் குறித்து மீண்டும் ஒரு உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி. அந்தப் பதிவில், "நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன்-2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.