சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து, ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், விஜய் ஆண்டனியும் இயக்குநர் சசியும் வேறுவேறு படங்களில் கவனம் செலுத்திவந்தனர். பின், ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தேசிய விருது வென்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கவுள்ளதாக கடந்த ஆண்டு இதே நாளில் அறிவிப்பு வெளியானது. பின்னர், இப்படத்தில் இருந்து இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி வெளியேறினார்.
‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (24.07.2021) வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கவுள்ளார். இத்தகவலை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகத் தெரிவித்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள இப்படம், அடுத்த வருடம் வெளியாகவுள்ளதாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விஜய் ஆண்டனிக்கு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Welcome to the Director’s Clan ‘Director’ @vijayantony 👏🏽 Wishing you the very best for #Pichaikkaran2 & #Bichagadu2 😊 Blockbuster 2022 ahead for you! @vijayantonyfilm @mrsvijayantony pic.twitter.com/2AHyYOjceE
— A.R.Murugadoss (@ARMurugadoss) July 24, 2021