vijay antony about ilaiyaraaja copy wright issue

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்க பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதையொட்டி டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நடிக்க வந்ததிலிருந்து மற்ற படங்களுக்கு இசையமைப்பது குறைந்துவிட்டது. இந்த வருட இறுதியில் மத்த படங்களுக்கும் இசையமைக்க உள்ளேன்” என்றார்.

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, “ராஜா சாரின் கம்பெனியில் உள்ள பாடல்களுக்கு அவர் தான் உரிமையாளர். மற்ற விஷயங்களுக்கு இளையராஜாவிடம் மரியாதை நிமித்தமாக படக்குழு கேட்டிருந்திருக்கலாம். படம் வெற்றி பெற்றவுடன் கமலை பார்த்தது போல் இளையராஜாவையும் பார்த்திருந்தால் இந்தளவிற்கு போயிருக்காது என நினைக்கிறேன். உண்மையாக என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. ராஜா சார், முன்னதாக சொந்தமாக ஆடியோ லேபிள் வைத்திருந்தார். எகோ கம்பெனியின் உரிமையாளரும் அவர் தான் என நினைக்கிறேன். அவர் நண்பரின் பெயரில் நடத்திட்டு வந்தார். உரிமம் உள்ள பாடல்களுக்கு மட்டும் தான் அவர் ராயல்டி கேட்கிறார் என நினைக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாடலுக்கான் உரிமம் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் கேட்டு பயன்படுத்தலாம். பிச்சைக்காரன் 2, கொலை, திமிரு பிடிச்சவன் ஆடியோ உரிமம் என்கிட்ட தான் இருக்கு. நானும் ஒரு ஆடியோ கம்பெனி நடத்தி வருகிறேன். அந்தப் பாடலை பயன்படுத்த நினைத்தால் என்னிடம் கேட்கலாம்” என்றார்.