தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் நானும் ரெளடி தான். இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இப்படத்தின்போது ஏற்பட்ட காதலால் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண வீடியோவை ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற தலைப்பில் ஆவணப்படமாக நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வருகிற 18ஆம் தேதி வெளியிட விருந்தது.
இந்நிலையில் அந்த ஆவணப் படத்தில் நானும் ரெளடி தான் படத்தின் பாடல்கள் மற்றும் 3 நொடிவீடியோவை பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனுஷின் இந்த செயலை கீழ்த்தரமான செயல் என்றும் அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி தற்போது அறிக்கை வெளியிட்டு தனுஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன், தனுஷ் பேசிய வீடியோவை அவர் அனுப்பிய நோட்டீஸுடன் சேர்த்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனுஷ் சொல்லியிருந்த ‘வாழு வாழ விடு’ என்ற டயலாக்கை சுட்டிக்காட்டி “இதையெல்லாம் நம்பும் சில அப்பாவி ரசிகர்களுக்காக நான் மனதார கடவுளை வேண்டிக்கொள்கிறேன்! மக்கள் மாறுவதற்கும் மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியைக் காண” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய வீடியோவை “இலவசமாகப் பாருங்கள்” என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைத்துள்ளார்.