Advertisment

சென்சார் சான்றிதழ் சிக்கல்; மறு ஆய்வுக்கு செல்லும் வெற்றிமாறன் படம்

vetrimaaran manushi movie case update

வெற்றிமாறன் தயாரிப்பில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுசி’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் முழுவதுமாக தயாராகி பல மாதங்கள் ஆகிறதென கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் அதில் காவல் துறையின் அடக்குமுறைக்கு பாலாஜி சக்திவேலும், ஆன்ரியாவும் எவ்வாறு ஆளாகிறார்கள் என்பது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் பல்வேறு புரட்சிகர வசனங்களும் இடம்பெற்றிருந்தது. இது பலரது வரவேற்பை பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

Advertisment

இதையடுத்து இப்படம் சென்சாருக்கு சென்ற நிலையில், படம் பார்த்த அதிகாரிகள், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்தனர். மேலும் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்து உத்தரவு பிறப்பித்தனர். இதை எதிர்த்து படத் தயாரிப்பாளரான வெற்றிமாறன், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே அவர் வைத்த கோரிக்கையான படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என வெற்றிமாறன் தரப்புக்கு சென்சார் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Advertisment

இதனையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுசி திரைப்படத்தை இன்று மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருக்கிறோம். அதில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதை ஏற்றுக் கொண்டு அந்த மனுதாரர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கினால், என்ன சான்று அவருக்கு வழங்கப்படும் என்பதை மறு ஆய்வு குழு தெரிவிக்கும். அப்படி அந்த காட்சிகளை மனுதாரர் நீக்க மறுத்தால் சென்சார் போர்டு முடிவுக்கு இந்த அறிக்கையானது அனுப்பப்படும்” என தெரிவித்திருந்தார். இதனை கேட்ட நீதிபதி, மறு ஆய்வுக் குழு, படத்தை பார்த்து அதன் முடிவுகளை மனுதாரருக்கு தெரிவித்த பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

MADRAS HIGH COURT DIRECTOR GOPI NAINAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe