
வெற்றிமாறன் தயாரிப்பில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுசி’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் முழுவதுமாக தயாராகி பல மாதங்கள் ஆகிறதென கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் அதில் காவல் துறையின் அடக்குமுறைக்கு பாலாஜி சக்திவேலும், ஆன்ரியாவும் எவ்வாறு ஆளாகிறார்கள் என்பது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் பல்வேறு புரட்சிகர வசனங்களும் இடம்பெற்றிருந்தது. இது பலரது வரவேற்பை பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
இதையடுத்து இப்படம் சென்சாருக்கு சென்ற நிலையில், படம் பார்த்த அதிகாரிகள், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சன்றிதழ் வழங்க மறுத்து விட்டனர். இதை எதிர்த்து படத் தயாரிப்பாளரான வெற்றிமாறன், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே அவர் வைத்த கோரிக்கையான படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என வெற்றிமாறன் தரப்புக்கு சென்சார் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கடந்த 11ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மறு ஆய்வுக் குழு படத்தை பார்த்து அதன் முடிவுகளை மனுதாரருக்கு தெரிவித்த பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்து வழக்கின் விசாரணையை இன்று ஒத்தி வைத்திருந்தார். அதன்படி இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்சார் போர்டு தரப்பில், மனு தாரரிடம் படத்தில் இடம்பெறும் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எவை என்பது குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் நீக்கினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதற்கு வெற்றிமாறன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சென்சார் போர்டு ஆட்சேபனைகளை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு தொடரலாம் என வெற்றிமாறன் தரப்பிற்கு நீதிபதி அறிவுறுத்தினார். பின்பு வழக்கை முடித்து வைத்தார்.