தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு, சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியுள்ள நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல தயாரிப்பாளர் ராக்ஃபோர்ட் முருகானந்தம் தயாரிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இது வெங்கட் பிரபுவின் பத்தாவது திரைப்படமாகும். இத்தகவலை, இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.