இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்திருக்கும் 'ஆர்.கே.நகர்' படத்தில் வைபவ், சனா அல்தாஃப் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும் இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக வெங்கட் பிரபு ட்விட்டரில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில்....
"சில தவிர்க்க முடியாத காரணங்கள், செய்யாத தவறுக்காக, நாங்கள் நிறைய பிரச்சனையை சந்திக்கிறோம். தேர்தலுக்கு பிறகு தான் படம் ரிலீசாகும் என்று என்று சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட யாரையும் குறிப்பிட விரும்பவில்லை. இப்போது உள்ளது போல் படம் மீண்டும் ரிலீசாகும் போது உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும். பிரச்சனை விரைவில் சரியாகும். இந்த படத்தில் கண்டிப்பாக அரசியல் இல்லை. யாரையும் குறிப்பிட்டு இந்த படத்தை உருவாக்கவில்லை. இது ஒரு ஜனரஞ்சகமான படம். எனவே தல பாணியில் சொல்ல வேண்டும் என்றால், வாழு, வாழவிடு' என்றார்.