பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனால் இந்த சீரிஸிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா.மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். நேற்று இந்த சீரிஸின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. சீரிஸை பார்த்த பலர் பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர். இதனிடையே ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஒரு ப்ரொமோவை வெளியிட்டுள்ளது. அதில் வீரப்பன், ரஜினி குறித்து பேசியுள்ளது இடம்பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதியில் எம்.ஜி.ஆர் போன்று ரஜினியும் வருவார் என்று கூறியுள்ளார். மேலும், ரஜினியை பயன்படுத்த அவரை அமுக்கநிறைய முதலைகள் காத்துகிட்டிருக்கு எனவும் வீரப்பன் அறிவுறுத்தியுள்ளார். இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.