
இந்தியில் பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தவர் நடிகை வீணா கபூர். மேலும், சில திரைப்படங்களிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வீணா கபூர் இறந்துவிட்டதாகவும், அவரது இளைய மகனே சொத்து தகராறு காரணமாக வீணாவை பேஸ்பால் பேட்டால் கொடூரமாக அடித்துக் கொன்று அவரது உடலை ஆற்றில் வீசிவிட்டதாகத் தகவல் வெளியானது. மேலும் கொலை செய்தவர் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட நடிகை வீணா கபூர், தான் உயிரோடு தான் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் எனக் கூறி மும்பை தின்தோஷி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடிகை வீணா கபூர், "வீணா கபூர் கொலை செய்யப்பட்டது உண்மைதான். ஆனால் அது நான் இல்லை. என் பெயர் கொண்ட மற்றொரு நடிகைக்குத்தான் அது நேர்ந்துள்ளது.
அவருக்குப் பதிலாக எனது புகைப்படத்தை அனைவரும் பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக நிறைய குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் எனக்கு வந்தது. இதனால் எனது பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். இந்த வதந்திகளால் எனக்கு யாரும் வேலை தர மறுக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வீணா கபூரின் மகன் அபிஷேக் சத்தா, "எனது தாயை நான் கொன்றதாகக் குற்றஞ்சாட்டி எனக்கு அழைப்புகள் வந்தது. இது போன்ற ஒரு விஷயத்தை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த செய்தியைப் படித்தவுடன் எனக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இதுபோன்ற செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். எனது தாயார் உயிருடன் இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இறந்துபோன வீணா கபூர் தற்போது உயிரோடு இருக்கும் வீணா கபூரோடு ஒரு பஞ்சாபி சீரியலில் இணைந்து நடித்துள்ளார். அதன் காரணமாக இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.