
கந்துவட்டி கொடுமைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பொது நலன் கருதி’ படம் வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் வசந்தபாலன் பேசும்போது....
"சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் திரையரங்குக்கு சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது... விஷால் அணி இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்... சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. கன்னட படமான கே.ஜி.எப் படம் இன்னமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகவில்லை. மற்ற மொழி படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வருவது கடினமாக உள்ளது. அது ஏன் இங்கு இல்லை... பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்" என்று ஆவேசமாக பேசினார்.