Skip to main content

இளம் கவிஞர்களுக்கு அழைப்புவிடுக்கும் வசந்த பாலன்!

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

vasantha balan

 

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் தற்போது ரிலீசிற்குத் தயாராகவுள்ளது. இப்படத்தின் பணிகளை முடித்த கையோடு, நடிகர் அர்ஜுன்தாஸை வைத்து அடுத்த படத்தை இயக்கிவருகிறார் வசந்தபாலன். இப்படமானது வசந்தபாலனின் பள்ளிக்கால நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பின்கீழ் உருவாகி வருகிறது. இப்படத்தில், கதாநாயகி கதாபாத்திரமானது பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காதல் பாடலை முழுக்க முழுக்க நா.முத்துக்குமாரின் கவிதை வரிகளை வைத்து உருவாக்க இயக்குநர் வசந்த பாலன் முடிவெடுத்துள்ளார். இப்பாடல் உருவாக்கும் பணியையும் இளம் கவிஞர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "'ஜெயில்' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து திரை பிரவேசத்திற்குக் காத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து என் பள்ளி நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் அர்ஜுன் தாஸ் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது ரசிகர்கள் அறிவீர்கள்.

 

இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தினுடைய கதைப்போக்கில் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல் செய்வதைப் போல ஒரு கதாபாத்திரமும், சில காட்சிகளும் அமைந்துள்ளன. இது எதேச்சையானதா அல்லது 25 ஆண்டு கால நா.முத்துக்குமாருடன் எனக்கு ஏற்பட்ட ஆழமான நட்பின் வெளிப்பாடா அல்லது இரண்டு பேரும் ஜூலை 12 என்ற ஒரே தேதியில் பிறந்ததனால் ஏற்பட்ட மானசீக உறவா அல்லது நான் சோர்வாய் வீட்டில் முடங்கிக்கிடந்த காலத்தில் உப்புக்கறியுடன் என்னை எழுப்பி என்னைப் பசியாற வைத்த நண்பன் மீது கொண்ட பாசமா என்று தெரியவில்லை.

 

இந்தக் கதையில் வரும் கதைநாயகி பண்பலை வானொலியில் ஒலிக்கும் திரைப் பாடல்களுடன் இணைந்து பாடல்களைக் கேட்டு ரசித்துப் பாடுகிற ஒரு கதாபாத்திரம். நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகை. மூன்றாம் பிறையிரவில் கதாநாயகனுக்கு நா.முத்துக்குமாரின் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களை கதாநாயகி விளக்க, அவனும் மெல்ல நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் ஈர்க்கப்படுகிறான். ரசிக்கிறான். இருவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு பௌர்ணமி இரவில் முத்துக்குமாரின் ஒரு பாடல் வரியை கதாநாயகன் உச்சரிக்க, அடுத்த வரியைக் கதாநாயகி உச்சரிக்க, வரிகள் பாடலாகி, இசையாகி காதல் மலர்கிறது. இந்த தருணத்தில் ஒலிக்கும் ஒரு காதல் பாடலுக்குப் பாடல் வரிகள் தேவைப்பட்டது.

 

நண்பரும் கவிஞருமான கபிலனிடம் எதேச்சையாக இந்த மாதிரி காட்சியமைப்பு உள்ளது என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தேன். நா.முத்துக்குமாரின் கவிதை வரிகளையே உபயோகப்படுத்தலாமே என்று கபிலன் ஆலோசனை வழங்கினார். எனக்கும் அதுதான் மிக சரியாகப்பட்டது. ஆனால் நா.முத்துக்குமார் கடல் அளவு கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார். அதிலுள்ள ஒரு காதல் கவிதையைப் பாடலாக மாற்றவேண்டும் அல்லது சில காதல் கவிதைகளிலிருந்து முத்துமுத்தான காதல் ததும்பும் வரிகளைத் தேர்ந்தெடுத்து முழுப் பாடலாக மாற்ற வேண்டும். நோய்மையில் அது மூச்சு முட்டும் பணி.

 

இதில் மற்றொரு சவாலும் இருக்கிறது. கவிதை வரிகள் உரைநடை பாணியில் இருக்கும். இசை சந்தங்களுக்குப் பொருத்தமான வரிகள் இருந்தால்தான் இசையமைக்க இசைவாகவும் இருக்கும். அது வெற்றியும் பெறும். இந்த பெரும் பணியில் நா.முத்துக்குமாரின் நண்பனாக, ஒரு திரைப்பட இயக்குநராக நான் மட்டும் ஈடுபடுவதை விட, நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகர்கள் விரும்பினால் என்னுடன் கை கோர்க்கலாம். விரும்பினால் இளம் பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமாரின் கவிதையிலிருந்து சின்ன சின்ன மாற்றங்களுடன் சந்தத்திற்கு ஏற்ற ஒரு பாடலை எழுதி அனுப்பலாம்.

 

காட்சிக்கும் இசைக்கும் பொருத்தமாக இருக்கும் பாடலை நானும் இசையமைப்பாளரும் இணைந்து தேர்ந்தெடுத்து திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்வோம். அப்படித் தேர்வாகும் பாடலை ஒருங்கிணைத்த அல்லது எழுதிய அந்த ரசிகருக்கு அல்லது பாடலாசிரியருக்கு நா.மு. கவிதையைத் தேர்ந்தெடுத்துத் தந்ததற்கு அல்லது சில கவிதைகளை வைத்துப் பாடலாகத் தொகுத்தமைக்கான அங்கீகாரமும், மரியாதையும், சன்மானமும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் வைத்து வழங்கப்படும். மேலும் நா.மு. கவிதைக்கான காப்புத்தொகை நா.முத்துக்குமாரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்

 

தேர்ந்தெடுக்கப்பட்ட நா.மு.கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி தினம்: 30 ஜூன் 2021, மின்னஞ்சல்: vb@urbanboyzstudios.com" எனக் குறிப்பிட்டுள்ளார்.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வீரப்பன் குற்றவாளி என்றால்... காவல்துறையின் கொடூரம்?” - வசந்த பாலன்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
vasantha balan about koose munisamy veerappan series

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் கடந்த 14 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டுள்ள இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். சீசன் 2 விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஐஎம்டிபி ரேட்டிங்கில் 9.1 புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள் ராஜேஷ் கண்ணா, சினேகன் உள்ளிட்டோர் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். 

அந்த வகையில் இயக்குநர் குமரன், சின்னத்திரை பிரபலம் ராஜு ஜெயமோகன், நடிகர் பால சரவணன் மற்றும் நடிகை வாணி போஜன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் வசந்த பாலன் இப்படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “ஜீ5-ல் வெளியாகியுள்ள வீரப்பன் தொடர் மிகவும் காத்திரமாக, நடுநிலையோடு, துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ளது. குரலற்ற, பாதிக்கப்பட்ட, உண்மையான மனிதர்களின் பேட்டியைக் காணும்போது தொடர் என்பதை மறந்து கண் கலங்குகிறது. ஹண்ட் ஃபார் வீரப்பன் (Hunt for veerappan) தொடர் ஒரு சார்பானதாகவும் அது ஒரு அரசியல் என உணர முடிந்தது. இந்த தொடர் வெளிவந்தது நல்தருணம். இந்த தொடரில் வீரப்பன் எழுப்பும் பல கேள்விகளுக்கு பதில் இல்லை நம்மிடம்.

நடிகனுக்கு இந்த தமிழ்நாட்டுக்காரனுங்க ஏன் ஓட்டு போடுறானுங்க. அரசியலைப் பத்தி அவங்களுக்கு என்ன தெரியும் என்று வீரப்பன் கேள்வி கேட்கும்போது, அத்தனை ஆண்டுகள் கழித்தும் விடை தெரியா சிரிப்பு கேள்வி. காட்டுக்குள் இருக்கும் முறையான படிப்பறிவு இல்லாத ஒருவனின் கேள்வி முக்கியமானது. இந்த தொடரைக் காணும்போது வீரப்பன் நல்ல கதைச் சொல்லியாகவும் நல்ல மேடை நடிகனாகவும் தோற்றமளிக்கிறான். வீரப்பன் குரல் பிசிறு இல்லாமல் பேட்டியில் வெளிப்படும்போது அவனிடம் இருந்த ஆளுமை வெளிப்படுகிறது. ஏகே 47 துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவன் நடித்துக் காட்டுவதையும் நடனம் ஆடுவதையும் பார்க்கும்போது சன்னதம் கொண்டாடும் வனதேவனைப் பார்ப்பது போல உணர்ந்தேன்.

வீரப்பன் யானைகளைக் கொன்று தந்தங்களை திருடியவன். சந்தன மரங்களைக் கடத்தியவன். அவன் குற்றவாளி என்றால் வாங்கியவன் யார்? வீரப்பன் தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் தன்னைக் காட்டிக் கொடுத்த கிராமத்தினரையும் கொன்றது மகா குற்றம் என்றால் தேடுதல் வேட்டையில் காவல்துறை மலைவாழ் மக்களைக் கொடூரமாகச் சித்திரவதைச் செய்ததையும், பெண்களை வன்புணர்வு செய்து தடாவில் சிறையில் அடைத்த கொடூரத்திற்கு என்ன பெயர் சூட்டுவது? முன்பே நக்கீரன் பத்திரிகையிலும் இணையத்தில் வந்திருந்தாலும் இணையத் தொடராக பார்க்கும்போது இலங்கையில் மட்டுமல்ல நம் தமிழகத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எந்த அரசும் செவி கொடுக்கவில்லை என்பது அநீதி. சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளியான பிறகும் நிவாரணத் தொகை இன்றைய தேதி வரை பாதிக்கப்பட்ட பலருக்கு சென்று சேரவில்லை என்ற தகவலை கேட்கும்போது கவலையளிக்கிறது.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரின் வீடியோ வெளியானது. இருபக்க நியாயங்களையும் எடுத்து கூறியது இந்த இணையத் தொடரின் சிறப்பு. நக்கீரன் பத்திரிகை நிருபர்களுக்கும், நக்கீரன் ஆசிரியருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்தொடரின் படக்குழுவினரான ஜெயச்சந்திர ஹாஷ்மி, பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன், ஷரத் ஜோதி உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டினார்.  

Next Story

"உண்மையைச் சொன்னால் ஒரு கூட்டம் திட்டத் துவங்கிவிடும்" - வசந்தபாலன் வேதனை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

vasantha balan about koolangal movie

 

அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருந்த படம் கூழாங்கல். லேர்ன் அண்ட் டீச் ப்ரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது. இந்தப் படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. மேலும் விருதுகளும் வென்றுள்ளது. 94வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்ப தேர்வு செய்யப்பட்டது. ஆஸ்கரின் இறுதி சுற்றுவரை சென்று பின்பு வெளியேறியது.

 

2021 ஆம் ஆண்டே இந்தப் படம் அனுப்பப்பட்டிருந்தாலும் வெளியாகாமலே இருந்தது. இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் சுதா கொங்கரா, "எனக்கு மிகவும் பிடித்த படம். மிகவும் பிடித்த இயக்குநரும் கூட" என குறிப்பிட்டு பாராட்டியிருந்தார். 

 

இந்த நிலையில் இப்படத்தை பார்த்து முன்னதாகவே பாராட்டு தெரிவித்திருந்த இயக்குநர் வசந்த பாலன், படம் குறித்து மற்றொரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், "கூழாங்கல் திரைப்படம் சிறப்பான அனுபவம். ஆனால் வெறும் வாழ்த்துகளுடன் திரைக்கலைஞன் வாழ முடியாது. சிறிய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் இது கடுமையான தண்டனைக் காலம். மீள்கிறவர்கள் பாக்கியவான்கள். இப்படி சிறிய திரைப்படங்கள் சம்பந்தமான உண்மையைச் சொன்னால் வசந்தபாலன் எப்பொழுதும் கசப்பை முன் வைப்பார் என்று ஒரு கூட்டம் திட்டத் துவங்கிவிடும். லவ்டுடே ஓடலையா, டாடா ஓடலையான்னு ஒரு கூட்டம் புள்ளி விவரத்தை முன் வைக்கும். இதுவும் கடந்து போகும்" என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.