2016-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் திகில் காமெடி ஜானரில் வெளியான படம் 'தில்லுக்கு துட்டு'. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராம்பாலா இயக்கியிருந்தார். இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து 'தில்லுக்கு துட்டு 2' படத்தை அதே திகில் காமெடி ஜானரில் எடுத்திருப்பார். தனது மூன்றாவது படமாக சமீபத்தில் வெளியான 'இடியட்' படத்தையும் அதே ஜானரில் எடுத்திருந்தார். இப்படத்தில் சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த ராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் ராம்பாலா இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' என தலைப்பு வைத்துள்ளனர். இப்பட போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சந்திரமெளலி, மீனாக்ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சந்தோஷ் மற்றும் பால சாரங்கன் இசையமைக்கின்றனர். பி.எஸ்.ரகுநாதன் தயாரிக்கிறார். ராம்பாலாவின் முந்தய படங்களை போலவே இந்த படமும் திகில் காமெடி ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.