Skip to main content

‘வலிமை’ அப்டேட் கொடுத்த போனி கபூர்... கடுப்பான அஜித் ரசிகர்கள்!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

valimai

 

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்த ஒரேயொரு சண்டைக்காட்சி மட்டும்  எஞ்சியுள்ள நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு அதை இந்தியாவிலேயே படமாக்கும் யோசனையில் படக்குழு உள்ளது. இதற்கிடையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது மே 1ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில், கரோனா பரவலால் இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடிநிலை காரணமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவோம் என அறிவித்திருந்தோம்.

 

அந்த அறிவிப்பை வெளியிடும்போது, கரோனா நோயின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் சுனாமி போல தாக்கும் என்று நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதார ரீதியாகவும் தங்களுடைய உறவுகளின் இழப்பு காரணமாக உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் மற்றும் இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை மற்றுமொரு தேதிக்கு மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்திப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மே 1ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், சில ரசிகர்கள் மே 1ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை வெறும் ட்வீட்டில் தெரிவித்துவிட்டு, தற்போது அப்டேட் இல்லை என்பதை மட்டும் அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கிறீர்களே என போனி கபூரை கிண்டலும் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித் படத் தயாரிப்பாளரின் கோரிக்கை - நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
ajith movie producer boney kapoor request to first time voters to vote pm modi

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே வேளையில், பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ajith movie producer boney kapoor request to first time voters to vote pm modi

இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இந்திய மக்களும் முதல் முறை வாக்காளர்களும் பிரதமர் மோடிக்கு ஓட்டுப் போட வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவி கணவரான இவர், தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்பு அஜித்தை வைத்து வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களையும் தயாரித்திருந்தார். இதனிடையே உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி, ஆர்.ஜே. பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் ஆகிய படங்களைத் தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் அவர், அரசியல் குறித்து கருத்து தெரிவித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது கருத்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

Next Story

“தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்” - ஸ்ரீதேவி மறைவு குறித்து போனி கபூர்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Boney Kapoor speaks about Sridevi passed away

 

திரைத்துறையில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். 

 

2018இல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றவர் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது. 

 

இந்த நிலையில், ஸ்ரீதேவி மரணம் குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் போனி கபூர். அவர் பேசுகையில், "முதலில், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. அது விபத்தால் ஏற்பட்டது. அதைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் ஏற்கனவே 24 முதல் 48 மணி நேரங்களுக்கு மேல் என்னிடம் நடந்த விசாரணையில் பேசிவிட்டேன். இந்திய ஊடகங்களின் அழுத்தம் காரணமாக தான் நாங்கள் செல்ல வேண்டியிருந்ததாக துபாய் போலீசார் என்னிடம் தெரிவித்தனர். நான் ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன். அதை தவிர வேறெதுவும் சொல்வதற்கு இல்லை என அவர்களிடம் சொன்னேன். 

 

பின்பு இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதே வேளையில் அங்கு நான் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்றும் திரையில் நல்ல உடல் நளினத்தோடு தோன்ற வேண்டும் என்றும் விரும்பினார். அதற்காக 46 - 47 கிலோவாக உடல் எடையை குறைத்தார். அது ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அவரை பார்த்தால் தெரியும். 

 

இந்த சம்பவத்திற்கு முன்பு, அவருக்கு பல சந்தர்ப்பங்களில் சட்டென மயக்கமாகும் நிலைக்கு சென்றிருக்கிறார். மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் பிரச்சனை இருப்பதாக டாக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் கடுமையான டயட்டை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தினார். இதேபோல் ஒரு படத்திற்காக கடுமையான டயட்டில் இருந்தபோது, அப்போதும் குளியலறையில் ஒருமுறை விழுந்து பல் உடைந்ததாக ஸ்ரீதேவி இறந்த பின் நடிகர் நாகார்ஜுனா என்னிடம் தெரிவித்தார்" எனப் பேசினார்.