
பாடலாசிரியர் மற்றும் கவிஞரான வைரமுத்து, தற்போது குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2, வ.கௌதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் வைரமுத்து தனது தாயார் இறந்துவிட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “என்னைப் பெற்ற அன்னை அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வைரமுத்துவிற்கு திரை பிரபலங்கள் ஆறுதல் சொல்ல தொடங்கியுள்ளனர். மேலும் அவரது தாயார் மறைவிற்கு இரங்கலும் சமூக வலைதளங்கள் வாயிலாக கூறி வருகின்றனர்.