நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட வைரமுத்து

vairamuthu fulfilled his long time wish

பாடலாசிரியர் மற்றும் கவிஞரான வைரமுத்து, தற்போது குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2, பாலா இயக்கியுள்ள வணங்கான் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் வணங்கான் வருகிற 10ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வைரமுத்து அதில் தனது திரை அனுபவம் மற்றும் வாழ்க்கை அனுபவம் குறித்து தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நீண்டநாள் ஆசை ஒன்று நிறைவேறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், “கன்னியாகுமரி சென்று வரும்வழியில் என் நீண்டநாள் ஆசையொன்றை நிறைவேற்றிக்கொண்டேன்.

நாகர்கோயிலுக்குள் புகுந்து ஒழுகினசேரி எங்கே என்று விசாரித்தேன். அங்கு வந்ததும் கலைவாணர் வீடு எங்கே என்று வினவினேன். நான் காணவிரும்பிய கலைவாணர் வீடு கலைந்த கூடுபோல் சிதைந்து கிடந்தது.

1941இல் கட்டப்பட்டு ‘மதுரபவனம்’ என்று பெயரிடப்பட்ட மாளிகை ஓர் உயரமான நோயாளியாக உருமாறிக் கிடந்தது. இந்த மண்ணின் பெருங்கலைஞர் கலைவாணர் நடித்து நடித்துச் சிரிக்க வைத்தவர்;

கொடுத்துக் கொடுத்தே ஏழையானவர்.

அந்த வளாகத்தில் ஒரு நூற்றாண்டு நினைவுகள் ஓடிக் கடந்தன. எத்துணை பெரிய கனவின் மீதும் காலம் ஒருநாள் கல்லெறிகிறது. கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணிலில்லை; மனசில்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe