Skip to main content

“விளக்குமாறு விளங்கிய கையில் செங்கோல்” - வைரமுத்து

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
vairamuthu about sripathy

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. ஏழ்மை குடும்பப் பின்னணியில் வளர்ந்த ஸ்ரீபதி கல்வியின் முக்கியத்துவம் கருதி வறுமையிலும் போராடிக் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்தச் சமயம் ஸ்ரீபதி  கருவுற்ற நிலையில் தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒரே நாளில் வந்துள்ளது. 

ஆனால் ஸ்ரீபதிக்கு தேர்வுக்கு ஒரு நாள் முன்பே பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் பிரசவமான இரண்டாவது நாளே தன்னுடைய கணவர் உதவியுடன் சென்னைக்கு காரில் வந்து சிவில் நீதிபதி தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். 

இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் எக்ஸ் தளத்தில் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜி.வி பிரகாஷ், “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு, மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் அசோக் செல்வன், “தமிழகத்தின் முதல் பழங்குடியினப் பெண் நீதிபதி. மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்” என பதிவிட்டுருந்தார். 

இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து, 

“இரும்பைப் பொன்செய்யும்
இருட்கணம் எரிக்கும்

சனாதன பேதம்
சமன் செய்யும்

ஆதி அவமானம் அழிக்கும்

விலங்குகட்குச் சிறகுதரும்

அடிமைப் பெண்ணை
அரசியாக்கும்

விளக்குமாறு விளங்கிய கையில்
செங்கோல் வழங்கும் 

கல்வியால் நேரும்
இவையென்று காட்டிய
பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி

உன் முறுக்கிய முயற்சியில்
இருக்கிற சமூகம்
பாடம் கற்கட்டும்

வளர்பிறை வாழ்த்து” என குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிதாசனை தி.மு.க குறியீடாக சுருக்கிவிட்டனர்” - வைரமுத்து  

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vairamuthu about bharathidasan

பாவேந்தர் பாரதிதாசனின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசனின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதனிடையே பாரதிதாசன் குறித்த நினைவுகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின், தமிழக சார்பில் மரியாதை செய்யப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்” என அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து கவிஞர் வைரமுத்து, “பாரதியாரை தேசியத்தின் குறியீடாகவும் பாரதிதாசனை திராவிடத்தின் குறியீடாகவும் ஆதியில் அடையாளப்படுத்தியவர்கள், காலப்போக்கில் பாரதியாரை காங்கிரஸ் குறியீடாகாவும் பாரதிதாசனை தி.மு.க குறியீடாகவும் சுருக்கிவிட்டனர். காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணி கொண்டாடும் இந்தக் காலகட்டத்திலாவது இருபெருங் கவிஞர்களையும் மீண்டும் தேசிய திராவிடக் குறியீடுகளாக மேம்படுத்த வேண்டுகிறேன். இருவரும் கட்சி கடந்தவர்கள்; தத்துவங்களுக்குச் சொந்தமானவர்கள். பாவேந்தர் பிறந்தநாளில் இந்த இலக்கியக் கோணல் நிமிர்ந்து நேராகட்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.