இயக்குநர் வசந்த் இயக்கத்தில் அர்ஜூன், மீனா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியான படம் ‘ரிதம்’. பிரமிட் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், நாகேஷ், மணிவன்னன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து வரிகளில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தன. இதில் சிறப்பம்சமாக ஒவ்வொரு பாடலையும் நீர், காற்று, பூமி, வானம் மற்றும் நெருப்பு என ஐம்பூதங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தன. இதில் ‘தனியே தன்னந்தனியே...’ பாடலை மட்டும் வாலி எழுதியிருந்தார்.
ஒரு ஃபீல் குட் காதல் படமாக வெளியான இப்படம் வெளியான சமயத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மென்மையான காதல் காட்சிகள், ஆர்பாட்டம் இல்லாத திரைக்கதை, மனதை வருடும் பின்னணி இசை என இப்படத்தை சிலாகித்து பேசும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக சமீப காலங்களில் இப்படம் தொடர்பான காட்சிகள் மற்றும் பின்னணி இசை சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பரவலாக பாராட்டி பேசப்பட்டது. இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படம் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து அவருடைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“கால் நூற்றாண்டு
கழிந்தபின்னும்
ரிதம் படப் பாடல்கள்
கொண்டாடப்படுவதைப்
புன்னகையோடு பார்க்கிறேன்
இசை மொழிக்கு
அழகு தருகிறது
மொழியோ இசைக்கு
ஆயுள் தருகிறது
ஐந்து பாடல்களுக்கும்
ஐம்பூதங்களை
உள்ளடக்கமாக்கியவர்
இயக்குநர் வசந்த்;
நல்லிசை நல்கியவர்
ஏ.ஆர்.ரகுமான்
நதியே நதியே பாடலில்
‘தண்ணீர்க் குடத்தில்
பிறக்கிறோம்
தண்ணீர்க் கரையில்
முடிக்கிறோம்’ என்ற வரிகளைத்
தமிழன்பர்கள் இன்றும்
மந்திரம்போல் ஓதுகிறார்கள்
காற்றே
என் வாசல் வந்தாய் பாடலில்
‘பூக்களுக்குள்ளே
தேனுள்ள வரையில்
காதலர் வாழ்க
பூமிக்குமேலே
வானுள்ள வரையில்
காதலும் வாழ்க’ என்ற வரிகளை
இன்றைய இருபது வயதுகள்
இதழோடு இதழ்சேர்த்து
உச்சரிக்கின்றன
நல்ல பாடல்கள்
தேன்போல...
கெட்டுப் போவதில்லை
படம் மறந்துபோனாலும்
பாடல்கள் மறப்பதில்லை
காடழிந்து போனாலும்
விதையழிந்து போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.