கிராமத்துக் கதைகளில் மண்வாசனை மாறாமல் எதார்த்தமான படங்களை இயக்கியவர் பாரதிராஜா. இப்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கும் 'மார்கழி திங்கள்', தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே 'தாய்மெய்' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வரும் பாரதிராஜா, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை நேரில் பார்த்து நலம் விசாரித்துள்ளார் வைரமுத்து. மேலும் 'தென்பாண்டி சீமையிலே...' பாடலை பாரதிராஜாவிற்கேற்ப வரிகளை எழுதி அவர் முன்பு பாடிக் காண்பித்து பாரதிராஜாவை நெகிழ வைத்துள்ளார்.
அவர் பாடுகையில், 'தென்மேற்கு சீமையிலே...தேனி நகர் ஓரத்துல... பால் பாண்டியாக வந்தான் பாரதிராஜா' எனப் பாடத் தொடங்கியதும் பாரதிராஜா சிரிப்பில் மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைரமுத்து. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.