Skip to main content

”பெரிய படம்னு கூப்டாங்க, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல” - நடிகர் வைபவ் பேச்சு

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Vaibhav

 

'யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களின் இயக்குநரான டீகே இயக்கத்தில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், பொன்னம்பலம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'.  ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படம் ரிலீஸ் செய்யப்படாமலேயே இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி காட்டேரி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் நடிகர் வைபவ் பேசுகையில், ''தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னிடம் பெரிய படம் பண்றோம் என்றார். ஆனால் இத்தனை நீண்ட காலம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அது இந்தப் படத்தில் இயக்குநர் டீகே மூலம் நிறைவேறியது. 

 

நடிகை வரலட்சுமி தற்போது மெலிந்துவிட்டார். அவருடைய பேச்சும் தற்போது நிதானமாக இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தொடக்கத்தில் அவர் வேகமாக பேசுவார். எனக்குப் புரியாது. அதனால் தற்போது பல விஷயங்கள் மாற்றம் அடைந்திருக்கிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் ‘காட்டேரி’ படம் வெளியாகிறது. அனைவரும் கண்டு களித்து ஆதரவு தர வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் நட்டு நடிகர்கள் அஞ்சலி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Vivek's Memorial Day Actors vaibhav cell murugan Tribute Planting trees

'சின்னக் கலைவாணர்' என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். 

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவையொட்டி பலரும் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் நடந்த விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி திருமணத்தில் கூட மணமக்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினர். 

இந்த நிலையில் இன்று (17.04.2024) விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே விவேக்கின் மேலாளராகவும், நடிகராகவும் வலம் வந்த செல் முருகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் வைபவ் ஆகிய இருவரும் விவேக்கின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர். 

Next Story

‘எவ்வளவோ முயன்றோம்... தவிர்க்க முடியவில்லை’ - கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வருத்தம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
kjr studios statement about alambana release issue

கௌஸ்துப் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆலம்பனா. இப்படம் இன்று (15.12.2023) வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது. அதே சமயம் ஆர்.டி. ராஜா தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தையும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது. உப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு 12 ஆம் தேதி வெளியாகிறது. 

அயலான் படத்திற்காக ஆர்.டி. ராஜாவின் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.10 கோடி கடனாகப் பெற்றிருந்தது. இந்தக் கடனை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ஏற்றுக்கொண்டு, ரூ. 3 கோடி திருப்பி செலுத்தியது. மீதமுள்ள தொகையை அயலான் அல்லது வேறு எந்த படத்தை வெளியிடுவதாக இருந்தாலும் அதன் வெளியீட்டுக்கு முன்பு திருப்பித் தருவதாக 2021ல் ஒப்பந்தம் செய்து கொண்டது. 

இதையடுத்து மீதமுள்ள பணத்தை திருப்பித் தராமல் ஆலம்பனா மற்றும் அயலான் படத்தையும் வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இரண்டு படங்களையும் நான்கு வாரங்களுக்கு வெளியிடத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த மனுவுக்கு, கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது. 

இந்நிலையில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், இன்று வெளியாகவிருந்த 'ஆலம்பனா' திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கௌஸ்துப் என்டேர்டைன்மெண்ட் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஆலம்பனா' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என்கிற தகவலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அறிவித்த தேதியில் திரைப்படத்தை வெளியிட அர்ப்பணிப்புடன் நாங்கள் முயற்சித்த போதிலும், எதிர்பாராத சில சூழ்நிலைகள் எங்களின் பலத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. எனவே, இந்த தவிர்க்க முடியாத சூழலால் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தவிர்க்க முடியாத சூழல் காரணமாக எங்களின் பார்வையாளர்கள், திரைப்பட வெளியீட்டாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்கள்.