
வடிவேலு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கமுத்து மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை பற்றி சிங்கமுத்து யூடியூப்-ல் தரக்குறைவாகப் பேசியதால் ரூ.5 கோடி நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறு பரப்பத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இனிமேல் வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது என்ற உத்தரவாத மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என சிங்கமுத்துவுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சிங்கமுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்தார். அதில் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தவறான எந்த தகவலையும் தெரிவிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நடந்த விசாரணையில் சிங்கமுத்து பதிலுரை தாக்கல் செய்யாததால் அவருக்கு எதிராக ஒரு தலைபட்சமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சிங்கமுத்து தரப்பில் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதன் காரணத்தால் பிரதான வழக்கில் தன்னுடைய பதிலுரை தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் அதனால் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு தலைபட்ச உத்தரவை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த பிரதான வழக்கில் உத்தரவிடப்பட்ட தடையை நீக்கி சிங்கமுத்து தரப்புக்கு ரூ.2, 500 அபராதம் விதித்து உத்தரவிட்டது.